மனைக்குப் பாழ் வாள்நுதல் இன்மை 

உலகில் வாழும் உயிரினங்களின் பிறப்பு பெண்ணினத்தின் வாயிலாக நிகழ்கின்றது. படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் உன்னதமான பிறவியாகப் பெண்ணினம் போற்றப்படுகின்றது.
Published on
Updated on
1 min read

உலகில் வாழும் உயிரினங்களின் பிறப்பு பெண்ணினத்தின் வாயிலாக நிகழ்கின்றது. படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் உன்னதமான பிறவியாகப் பெண்ணினம் போற்றப்படுகின்றது. இல்லறத்தில் வாழ்பவர்க்கு இல்லாள் இன்றி எதுவும் சிறக்காது என்பதை இலக்கியங்கள் பேசுகின்றன. 

மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை 
                                                              தான்செல்லும்
திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை 
                                                                தனக்குப்பாழ்
கற்றறிவு இல்லா உடம்பு   

(நான்மணிக்கடிகை)

ஒரு வீட்டிற்குப் பாழாவது மனைவி இல்லாமை; தான் செல்லும் திசைகளில் உள்ள ஊர்களுக்குப் பாழாவது அங்கு நண்பர் இல்லாமை; பலரும் கூடியிருக்கும் அவைக்குப் பாழாவது கல்வி, கேள்வி சான்ற பெரியோர் இல்லாமை; தனக்குப் பாழாவது கல்வியறிவில்லாத உடம்பு உள்ளமை.  

கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை 
                                                                         ஈன்றாளோ
டெண்ணக் கடவுளுமில்   
(நான்மணிக்கடிகை)

ஒருவனுக்குக் கண்ணைப் போல் சிறந்த உறுப்பு வேறு ஒன்று இல்லை; கணவனைப் போன்ற நெருங்கிய உறவினர் ஒரு பெண்ணுக்கு வேறு ஒருவர் இலர்; தம் பிள்ளைகளைப் போல் ஒளியுடையவாய்ப் பொருந்திய  பொருள் வேறு பொருள் இல்லை எனக் கூறும் இப்பாடலில் பெண்களுக்கு கணவன், பிள்ளைகள் முக்கியமானவர்கள் எனக் கூறப்பட்டுள்ள போதிலும் தாயை விடச் சிறந்த கடவுள் எதுவுமில்லை என்று போற்றியுள்ளமை உணரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com