தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

இந்த வாரம் கலாரசிகன் - 19-04-2026

தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்று நேரில் பார்ப்பதற்காக கோவை சென்றிருந்த நான், அங்கிருந்து ஈரோட்டுக்கும் சென்றேன்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 11:32 am

தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்று நேரில் பார்ப்பதற்காக கோவை சென்றிருந்த நான், அங்கிருந்து ஈரோட்டுக்கும் சென்றேன். பழைய நினைவுகள் மனதில் பின்னோட்டமிட்டன (ஃப்ளாஷ் பேக்). நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நானும் ஈ.வெ.கி.ச. இளங்கோவனும் மிக நெருக்கமான நண்பர்கள். அவரைச் சந்திக்க அடிக்கடி ஈரோட்டுக்குச் செல்வதுண்டு.

அப்போது, அவர் பிரபல அரசியல் தலைவராக உயர்ந்திருக்கவில்லை. சட்டப்பேரவை உறுப்பினரோ, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலோகூட இல்லை. மாவட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த நேரம். சென்னையில் இருந்து ஈரோட்டில் குடியேறி, தனக்கென அரசியல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் முனைப்பில் இருந்தார் அவர்.

சிவாஜி ரசிகர் மன்றத்தின் தலைவராகவும், ஈரோடு நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்த ஈ.வெ.கி.ச. இளங்கோவன், அதிக தாமதமில்லாமல் மத்திய, மாநில அரசியலில் வலம் வரப் போகிறார் என்பதை என்னால் அப்போதே கணிக்க முடிந்தது. அதற்குக் காரணம் அவரிடம் இருந்த தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் பண்பு.

ஈரோட்டுக்குச் செல்லும் போதே, டகுடியரசு இல்லம்' எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். மகாத்மா காந்தி ஒரே ஒரு முறைதான் அகில இந்திய காங்

கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்திருக்கிறார் என்றால் பலருக்கும் அது வியப்பாக இருக்கும். 1921-இல் மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் யார் தெரியுமா? இப்போதைய திராவிட இயக்கத் தந்தையான டபெரியார்' என்று அவர்களால் அழைக்கப்படும் ஈ.வெ.ரா. பெரியார் ஈ.வெ.ரா. தலைவராக இருந்தபோது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் ஈரோட்டில் உள்ள அவரது வீட்டில்தான் இயங்கியது. அங்கிருந்து தான் டகுடியரசு' இதழ் வெளிவந்தது.

அதனால், அவர் வாழ்ந்த வீடு டகுடியரசு இல்லம்' என்றானது.

வாசலில் கம்பிக் கிராதி போட்ட, திண்ணையுடன் கூடிய அந்த ஓட்டு வீட்டின் முகப்பை மாற்றாமல்,

அப்படியே வைத்திருந்தார் நண்பர் இளங்கோவன். ஈரோட்டுக்குப் போனால் தனது வீட்டில்தான் தங்க வேண்டும் என்பது இளங்கோவனின் அன்புக் கட்டளை. அவரது மனைவி வரலட்சுமியின் கைப்பக்குவம் குறித்து ஒரு புத்தகமே எழுதலாம். விருந்தோம்பல் என்றால் என்ன என்பதை

இளங்கோவன் தம்பதியிடம்தான் பார்க்க வேண்டும்.

நாங்கள் ஈரோட்டை அடையும்

போதே இருட்டி விட்டது. அப்படியும், காரில் சுற்றிப் பார்க்கக் கிளம்பி விட்டோம். நான் பார்க்க விரும்பிய முக்கியமான இடம் டகுடியரசு இல்லம்' . அங்கே போனபோது, டகுடியரசு இல்லம்' என்கிற பெயருடன், நவீனக் கட்டடம் எழுப்பப்பட்டிருந்தது. காலத்துக்கேற்ற மாற்றம் கண்டிருப்பதில் தவறு காண முடியவில்லை.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஈரோடு என்றால், ஈ.வெ.கி.ச. இளங்கோவன், இப்போது ஈரோடு என்றால் தோழர் த. ஸ்டாலின் குணசேகரன் என்று மாறி விட்டது. டஈரோடு பெற்றெடுத்த, இளைஞர்களின் டபெரியார்' என்று கவிஞர் மு.மேத்தாவால் ஸ்டாலின் குணசேகரன் வர்ணிக்கப்படுவதை நான் வழிமொழிந்து ஆமோதிக்கிறேன்.

ஈரோட்டில் ஸ்டாலின் குணசேகரன் தொடங்கிய டமக்கள் சிந்தனைப் பேரவை' இப்போது அந்த மாவட்டத்தைக் கடந்து, தமிழகத்தின் எல்லைக்கு வெளியே விரிந்து, இந்தியாவுக்கு வெளியேயும் நான்கு திசைகளிலும் பரவிக் கொண்டிருக்கும் வீரியம் மிகுந்த வித்தாக மாறி இருக்கிறது. ஜப்பான் கிளையில் அவர்கள் அண்மையில் முன்னெடுத்த நிகழ்ச்சிகள் உலகின் பார்வையை ஈர்த்திருக்கின்றன.

ஈரோடு வரை சென்று ஸ்டாலின் குணசேகரனை சந்திக்காமல் திரும்பி விடுவேனா என்ன? நான் வந்திருக்கிறேன் என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டதும், எனக்காகக் காத்திருக்காமல் அவரே என்னைத் தேடி வந்துவிட்டார். வரும்போதே கையோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் வெள்ளி விழாச் சிறப்பு மலரைக் கொண்டு வந்திருந்தார்.

தொடர்ந்து கால் நூற்றாண்டு காலம் இளைஞர் பட்டாளத்தைத் திரட்டி ஓர் அமைப்பாக வழிநடத்துவது என்பது சாதாரணமான சாதனையல்ல.

25 ஆண்டுகளில் இளைஞர்கள் முதியவர்களானார்கள், சிறுவர்கள் இளைஞர்களாகி அவர்களது இடத்தை நிரப்பினார்கள். அந்தச் சுழற்சி தடைபட்டு விடாமல் தொடர்கிறது என்றால் அதற்கு ஸ்டாலின் குணசேகரன் என்கிற அச்சாணிதான் காரணம்.

வெள்ளி விழாச் சிறப்பு மலரைப் புரட்டிப் படித்தால் அப்படியே வியப்பில் சமைந்து விடுகிறோம். கடந்த 25 ஆண்டுகளில் மக்கள் சிந்தனைப் பேரவையின் கூட்டங்களில் முக்கியமான ஆளுமைகள் ஆற்றிய உரைகள்; மக்கள் சிந்தனைப் பேரவையின் பல்வேறு களப் பணிகள்; சாதனைகள் என்று மலைப்பை ஏற்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்புதான் அந்த வெள்ளி விழா மலர்.

மகாகவி பாரதியாரின் இறுதிப் பேருரை ஈரோடு கருங்கல்பாளையம் வாசக சாலையின் ஐந்தாம் ஆண்டு விழாவில் நிகழ்ந்தது. டமனிதனுக்கு மரணமில்லை' என்கிற தலைப்பில் பாரதியார் உரையாற்றிய இடத்தில், மகாகவிக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னெடுத்தது மக்கள் சிந்தனைப் பேரவை. 2007-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த த. உதயசந்திரன் அந்த வேண்டுகோளை நிறைவேற்றிக் கொடுத்தார்.

அப்போதைய கல்வி மற்றும் நூலகத் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசால் திறந்து வைக்கப்பட்ட அந்த நினைவு மண்டபத்தில் மகாகவி பாரதியாரின் அனைத்துப் படைப்புகள் மட்டுமல்லாமல், அவர் குறித்தும், அவரது படைப்பு குறித்தும் வெளிவந்துள்ள அனைத்துப் படைப்புகளும் பாதுகாக்கப்படுகின்றன; பாரதி அன்பர்களின் வாசிப்புக்குக் காத்திருக்கின்றன.

மேலே குறிப்பிட்டிருப்பது மக்கள் சிந்தனைப் பேரவையின் செயல்பாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஆண்டுதோறும் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழாவும், பாரதியார் பிறந்த நாள் அன்று நடத்தப்படும் ஊர்வலமும், பாரதியார் விருது வழங்கும் விழாவும் ஸ்டாலின் குணசேகரன் என்கிற ஆளுமையின் தனித்துவத்துக்கு ஏனைய சான்றுகள்.

எந்தவித அரசு உதவியும் இல்லாமல், தனக்கென்று பெரிய பின்னணியோ, நிறுவன ரீதியிலான பின்புலமோ இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் நண்பர் ஸ்டாலின் குணசேகரன் தனிமனிதரோ, ஆளுமையோ அல்ல, ஓர் இயக்கம் என்பதைப் பறைசாற்றுகிறது அவர் எனக்குத் தந்த வெள்ளி விழாச் சிறப்பு மலர்.

எங்கே படித்தேன் என்று நினைவில்லை; ஆனால், நன்றாக இருக்கிறது. பதிவு செய்கிறேன்.

கொடியுடன் வந்தவர்கள்

கொடியின்றிப் போகிறார்கள்

உதிர்ந்து விழுகிறது

தொப்புள் கொடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.