நபி(ஸல்)களின் நேசம்!
மனிதர்களிடம் மட்டுல்ல, விலங்கினங்களிடமும் நேசத்தைக் காட்டியவர் உலகம் போற்றும் உத்தமர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். காட்டில் சுதந்திரமாகத் திரிந்த மான் கூட்டத்தில் ஒரு வேடன் நுழைந்தான். அந்த மான்களில்


மனிதர்களிடம் மட்டுல்ல, விலங்கினங்களிடமும் நேசத்தைக் காட்டியவர் உலகம் போற்றும் உத்தமர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
காட்டில் சுதந்திரமாகத் திரிந்த மான் கூட்டத்தில் ஒரு வேடன் நுழைந்தான். அந்த மான்களில் ஒரு ஆண் மான், ஒரு பெண் மான் இருந்தன. இரண்டு நாள்களுக்கு முன் அவற்றுக்கு மான் குட்டிப் பிறந்திருந்தது. வேடன் அம்பை எய்தபோது மான் கூட்டம் சிதறி ஓடியது. குட்டியை ஈன்ற பெண் மான் மட்டும் வேடன் கையில் சிக்கியது. அதைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தான் வேடன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவ்வழியே வந்தார்கள்.
நபிகளாரைப் பார்த்து அந்தப் பெண் மான், ""என்னைக் காணாமல் என்னுடைய இனமான கலை ஆண் மான் எந்த அளவுக்குத் துன்பப்படுமோ...! எனவே என்னை விட்டுவிடச் சொல்க. நான் சென்று குட்டிக்கு பால் கொடுத்து, ஆண் மானிடம் நான் கட்டுண்ட கதையைச் சொல்லி மீண்டும் வருகிறேன்'' என்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வேடனைப் பார்த்து, "'நீ அந்தப் பெண் மானை விட்டு விடு'' என்றார்கள். ஆனால், வேடனோ ""முடியாது'' என்றான். ""பிணையாக நான் வருவேனப்பா! நீ அந்த மானை விட்டுவிடு. நிச்சயம் திரும்பி வரும். அது திரும்பி வராத பட்சத்தில் நான் இருக்கிறேன். அதற்குப் பதிலாக இரண்டு மான்களை உனக்குத் தருகிறேன். குட்டிக்குப் பால் கொடுக்க வேண்டுமென்று குமுறுகிறது. எனவே அதை அனுப்பி வை'' என்று நபிகளார் நீண்ட நேரம் வாதாடிய பிறகு, ""சரி, போய் விரைவிலே வா'' என்று அந்தப் பெண் மானை வேடன் அனுப்பி வைத்தான்.
தன் குழந்தைக்குப் பால் கொடுத்துவிட்டு - பெண் மான் ஆண் மானிடத்திலே, ""நான் இப்படி உறுதியளித்துவிட்டு வந்திருக்கிறேன். எனக்குப் பதிலாக நபிகளார் அவர்கள் அங்கே பிணையாக இருக்கிறார்கள். நான் உடனே அங்கே செல்ல வேண்டும்'' என்றது. ""போகக்கூடாது'' என்று எல்லா மான்களும் கூறின.
""தலை சிறந்த ஒரு பெரியவராகிய நபிகளாருக்கு முன்னால் நான் அளித்த வாக்குறுதியை மாற்றி விட்டு இங்கே இருப்பதை விட ஒரு புலியின் வாயினால் கடிபட்டு சாவது மேல். உயிரோடு வாழ்வது மேலல்ல. வாக்குறுதி தவறி வாழ்வதை விடச் சாவது மேல்'' என்று அந்த மான் சொன்னதும், பிறகு குட்டியையும் அழைத்துக் கொண்டு வேடனிடத்திலே சென்றதும், வேடன் தன்னுடைய தவறுக்கு வருந்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலடியிலே விழுந்ததும், அவனை அவர்கள் ஏற்றுக் கொண்டதும் அந்தப் படலத்தினுடைய தொடர் நிகழ்ச்சிகள்.
இறைத் தூதர்களிடமும், இறையருள் பெற்ற இறை நேசச் செல்வர்களிடமும், பறவைகள், விலங்குகள் பேசிய வரலாறுகளை வேதங்களில் காணலாம். நேரிய வழியில் நெறி பிறழாது வாழும் விலங்கினங்களும் நேர்மை, நாணயம் தவறாது நடக்கும் என்பதையும் வாக்குறுதி மாறாது சொன்னதை சொன்னபடி செய்யும் என்பதையும் "சீறாபுராணம்' ஊரறிய உரைக்கிறது
நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் வாழ்வில் நடந்த நயமான நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியாய் படிக்கும் வண்ணம் நெகிழ்ச்சியுடன் நினைவில் கொண்டு வந்து காட்சிப்படுத்தும் மாட்சிமையுடைய சீறாபுராணத்தை சீறுடன் படித்து செம்மை பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...