/

அனைத்தையும் கண்காணிப்பவர்!

நம்மைப் படைத்த இறைவன் ஒவ்வொரு விநாடியும் கண்காணித்து வருகின்றான்.

News image
Updated On :4 ஏப்ரல் 2013, 10:00 am

ஜி. அஹ்மது

நம்மைப் படைத்த இறைவன் ஒவ்வொரு விநாடியும் கண்காணித்து வருகின்றான். இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா(ஜனாதிபதி) உமர் (ரலி), ஒரு நாள் மதீனா நகரில் நள்ளிரவில் நகர் சோதனை செய்தார். ஓர் இல்லத்தில் தாயும் - மகளும் உரையாடிக் கொண்டிருப்பது ஜனாதிபதியின் செவியில் தெளிவாகக் கேட்டது.

பால் வியாபாரம் செய்யும் தாய், தன் மகளிடம் ""என் அன்பு மகளே! பாலில் தண்ணீர் கலந்து விற்றால், நமக்கு அதிக லாபம் கிடைக்கும். அதனால் நமது வறுமை ஒழிந்து நிம்மதியாக வாழலாம்'' எனக் கூறினாள். ஆனால், மகளோ இறையச்சமும், மார்க்க உணர்வும் மிக்கவள். எனவே, மகள் தாய் கூறியதை மறுத்து, ""அம்மா! பாலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்வது கூடாது. அது மிகவும் பாவமான செயலாகும். மேலும் பாலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்வது குற்றம் என்பது ஜனாதிபதியின் உத்தரவு. ஆகையால், பாலில் தண்ணீர் கலக்காமலேயே விற்பனை செய்வோம்'' என்று கண்டிப்பாகக் கூறினாள்.

""அடி போடி பைத்தியக்காரி! பிழைக்கத் தெரியாதவளே! இப்போது நாம் இருவர் மட்டுமே இருக்கின்றோம். ஜனாதிபதியா பார்த்துக் கொண்டிருக்கிறார்?'' என தாய் தனது வாதத்தை மகளிடம் எடுத்துரைத்தாள். ""ஜனாதிபதி உமர்(ரலி) அவர்கள் நம்மைப் பார்க்கவில்லைதான். ஆனால் ஜனாதிபதியையும்,நம்மையும் படைத்த இறைவன் நம் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான். நமது ஒவ்வொரு செயல்களையும், பார்க்கக்கூடிய ஆற்றல் மிக்கவன், எல்லாம் வல்ல இறைவன் ஆவான். அவனது கண்களிலிருந்து இப்பெரிய குற்றத்தை மறைக்க இயலாதே'' என்று கூறி மகள் பாலில் தண்ணீரைக் கலக்க உறுதியாக மறுத்துவிட்டாள்.

தாய் - மகளின் உரையாடலைக் கேட்ட பின், கலீஃபா உமர்(ரலி) அவர்கள், அவ்விருவரின் குடும்ப சூழ்நிலை குறித்து பின்னர், மேலும் விசாரணை செய்து அறிந்துகொண்டார். இறையச்சமும், மார்க்க இறை உணர்வும் கொண்ட விதவைத் தாயின் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்களின் வறுமையை ஒழித்து, ஒரு சிறப்பான வாழ்வினை கலீஃபா உமர் (ரலி) வழங்கினார்கள்.
இந்த உண்மைச் சம்பவமானது, "இறையச்சமும் மார்க்க பற்றுமே அவர்களை உயர்த்தி, நல் வாழ்வினை வழங்கியது' என்கிற நல்ல படிப்பினையை நமக்கு வழங்குகிறது.

எனவே, "காலம் பொன் போன்றது'. இன்று செய்ய வேண்டிய நற்செயல்களை நாளையென ஒத்திப் போட வேண்டாம். ஆகையால், இன்றே செய்க. அதுவும் நன்றே செய்க. ஒவ்வொரு நாளின் இரவும் - பகலும் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருக்கிறது. கடந்து விட்ட நாளின், இழந்து விட்ட உலக இன்பத்தையும், செல்வத்தையும் பற்றியே கவலை கொள்கின்றோம். ஆனால், கடந்த நாள்களில் நற்செயல்களைப் புரியாது நன்மைகளை இழந்துவிட்டோமே! அதைப் பற்றி யாராவது கவலைப்படுகின்றோமா? சிந்திப்பீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.