தடைகள் நீங்கப்போகிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

12 ராசிக்கான இந்த வாரப் பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
தடைகள் நீங்கப்போகிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

12 ராசிக்கான இந்த வாரப் பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

மன மகிழ்ச்சி பெருகும் நேரமிது. புதிய பொருள்களின் சேர்க்கை நிகழும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வானியல் துறையில் ஈடுபட்டவர்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும். தகவல் தொடர்பு இனங்கள் தொடர்புடையவர்கள் முன்னணிக்கு உயர்வார்கள். வியாபாரிகளுக்கு செய்தொழிலில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். விழிப்புணர்வுடன் செயல்பட்டால் லாபம் சற்று கூடுதலாகவே கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி ஆதாயம் அதிகரிக்கும். கூலித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். 

அரசியல்வாதிகள் எந்தக் காரியத்திலும் அவசரப்படாமல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். நல்ல வாய்ப்புகள் கூடிவரும் கலைத்துறையினருக்கு பயணங்களின் மூலம் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். படைப்புகளுக்கு வரவேற்பு அதிகரிக்கும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் மேலோங்கும். மாணவமணிகள் எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. அதிக மதிப்பெண்களைப் பெற முயற்சி செய்வீர்கள்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 04, 05. 

சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உங்களின் நீண்ட நாளைய ஆசை பூர்த்தியாகும் நேரமிது. கடின உழைப்பால் முன்னேற்றம் அடைவீர்கள். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து அன்பு பாராட்டுவார்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் மிகுந்த உதவி கிடைத்தாலும், அலுவலக ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகள் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கால்நடைகளை நன்கு பராமரித்து அபரிமிதமான லாபம் காண்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் கவனம் உங்கள் மீது இருப்பதால் காரியங்களை துரிதமாக நிறைவேற்றுங்கள். தொண்டர்களும் எதிர்பார்த்த உதவிகளைச் செய்வார்கள். 

கலைத்துறையினருக்கு கடும் போட்டி களினால் ஒப்பந்தங்கள் வர சற்று தாமதமாகும். ஆனாலும் தங்கள் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைத்து மகிழ்வீர்கள். 

பெண்மணிகள் உற்றார் உறவினரிடம் பகைமை பாராட்டினாலும் கணவருடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். மாணவமணிகள் விளையாட்டுகளில் அதி தீவிர பயிற்சியை மேற்கொள்வீர்கள். 

பரிகாரம்: மகான்களின் தரிசனம் உகந்தது. அனுகூலமான தினங்கள்: 05, 06. சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்களின் சிந்தனைகள் தெளிவாகும் நேரமிது. வருமானம் உயரத் தொடங்கும். நண்பர்களைத் தேர்ந்தெடுத்து பழகவும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் குறைந்து ஆதரவு வெளிப்படும். பணியிட மாற்றம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை உண்டாகும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் பூச்சி மருந்துகளை சரியான நேரத்தில் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவீர்கள். சந்தைகளில் உங்கள் தானியங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றிகள் குவியும். வாக்கு சாதுர்யத்தால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். கலைத்துறையினர் புதுப்புது ஒப்பந்தங்களை ஏற்று திறமைகளை வெளிப்படுத்துவார்கள். நலிந்த கலைஞர்களுக்கும் உதவி புரிவார்கள். 

பெண்மணிகள் உற்றார் உறவினர்களிடம் பரஸ்பரம் அன்பு பாராட்டுவீர்கள். இல்லத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். மாணவமணிகள் வெளி விளையாட்டுகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். சக மாணவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் ஒற்றுமையை கடைப்பிடித்து வரவும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 04, 06. சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பக்தியும் தர்ம சிந்தனையும் மேலோங்கும். பொது வாழ்வில் ஈடுபட்டு பிறருக்கு சேவை செய்யும் ஆர்வம் அதிகரிக்கும். கோபம் அதிகம் இருந்தாலும் நல்ல குணமும் சேர்ந்தே இருக்கும். 

உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடமைகளைச் சரிவர நிறைவேற்றி மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இயந்திரம் தொடர்பான பணிகள் லாபம் தரும். போட்டிகளைச் சமாளித்து அபிவிருத்தி காண்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் லாபம் அதிகரிக்கும். புதிய குத்தகைகளை எடுத்து நடத்துவீர்கள்.  

அரசியல்வாதிகள் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் நிதானம் அவசியம். சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து விடுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் புத்திசாலித்தனம் பளிச்சிடும். பொருள் வரவு அதிகரிக்கும். 

பெண்மணிகள் எந்தக் காரியத்திலும் பதட்டமில்லாமல் செயல்படவும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண வழி பிறக்கும். மனதிற்கு இனிய சம்பவங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

பரிகாரம்: நவகிரகங்களை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 06, 07. சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

மனமகிழ்ச்சி அதிகரிக்கும். மனதிற்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். தெய்வ வழிபாடு கூடும். புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சிலருக்கு  அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கு ஏற்ப வரவேற்பு அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொண்டு அவர்களது ஆதரவைப் பெறுவீர்கள். 

வியாபாரிகளுக்கு கூட்டாளிகளுடன் கருத்து வேற்றுமை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். விவசாயிகள் புதுப் புது குத்தகைகளை எடுத்து நல்ல மகசூல் காண்பீர்கள். கால்நடைகளையும் நன்கு பராமரித்து வருவீர்கள். 

அரசியல்வாதிகள் அனைவரிடமும் சுமுகமாகப் பழகி மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்புமுனை ஏற்படும். கலைத்துறையினருக்கு பயணங்களால் அலைச்சல் ஏற்படும். சக கலைஞர்களின் ஆதரவால் தொழிலில் நற்பெயர் எடுப்பீர்கள். பெண்மணிகள் குடும்ப நலனிலும், சகோதர சகோதரிகள் நலனிலும் அக்கறை செலுத்துவீர்கள். 

குழந்தைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகளுக்கு எதிர்பார்த்த வெளிநாட்டுப் படிப்பு கைகூடிவரும். பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களின் உதவிகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 07, 08. சந்திராஷ்டமம்: 04, 05.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உடலாரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. உடற்பயிற்சிகள் செய்வது அவசியம். சகோதர சகோதரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் சற்று கவனத்துடன் ஈடுபட வேண்டியிருக்கும். சக ஊழியர்களின் உதவியால் தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் நல்ல லாபம் காண்பீர்கள். போட்டியாளர்களைச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளால் நஷ்டம் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சியில் உயர் பதவிகளைப் பெறுவீர்கள். எவரிடமும் உங்களது ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நன்மை பயக்கும். கலைத்துறையினருக்கு பேரும், புகழும் உயரும் படியான வாய்ப்புகள் வரும். 

பெண்மணிகள் மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். கணவரின் உடலாரோக்கியத்திலும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். படிப்பில் அதிக மதிப்பெண் பெற உழைப்பை கூட்டிக் கொள்ளவும்.

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 04, 09. சந்திராஷ்டமம்: 06, 07, 08.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் நன்மை உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். மாற்றுப் பயிர்களைப் பயிரிடும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். 

அரசியல்வாதிகளுக்கு இழுபறியாக இருந்த காரியங்களில் நிறைவு ஏற்படும். எதிர்காலம் சார்ந்த திட்டங்களில் நல்ல திருப்பம் ஏற்படும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 

கலைத்துறையினர் நுட்பமான செயல்பாடுகளின் மூலம் புதிய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்மணிகள் உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பயணங்களின்போது நிதானமாக செயல்பட வேண்டும். மாணவமணிகளுக்கு புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வெற்றிப்பாதையில் செல்வீர்கள்.

பரிகாரம்: சக்தி வழிபாடு உகந்தது. அனுகூலமான தினங்கள்: 05, 08. சந்திராஷ்டமம்: 09, 10.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சுபகாரியங்கள் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை மேம்படும். வெகுநாளாக மனதில் இருந்த குழப்பங்கள் தீரும். 

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைச் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளிடம் ஒற்றுமையான சூழல் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவைக்கேற்ப உபகரணங்களை வாங்குவீர்கள். 

அரசியல்வாதிகள் புத்துணர்ச்சியுடன் எந்த ஒரு செயலிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வுகளைக் காண்பீர்கள். கலைத்துறையினர் நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்புகள் தற்போது தேடி வரும். பெண்மணிகள் குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து செயல்படவேண்டும். 

பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகளில் அதிக கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: சிங்கார வேலவரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 04, 07. சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலை மேம்படும். ஆன்மிகத்தில் ஆர்வம் கூடும். உற்றார் உறவினர்கள் மற்றும் சகோதர, சகோதரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும். கொடுத்த வேலைகளை உடனுக்குடன் முடித்து நற்பெயர் எடுக்கப் பாடுபடுவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கனிவுடன் கவனித்து நேரடிப் பார்வையில் வியாபாரத்தை நடத்துவீர்கள். விவசாயிகள் கால்நடைகளை நன்கு பராமரித்து லாபமடைவீர்கள். நீர்வரத்து அதிகரிப்பால் விளைச்சல் பெருகும். 

அரசியல்வாதிகள் திட்டமிட்ட பணிகளைத் தீவிரமாக முடிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு பலன்தரும். கலைத்துறையினருக்கு பண வரவு அதிகரிக்கும். திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்து மகிழ்வீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு அதிகரிக்கும். உடலாரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாணவமணிகள் பெற்றோரின் ஆதரவினால் வெளிநாடு சென்று படிக்க ஆயத்தமாவீர்கள். விளையாட்டுத் துறையிலும் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 09, 10. சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தெய்வப் பணிகளிலும், தர்மப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். மனதில் தெளிவு பிறக்கும். பண நடமாட்டம் திருப்திகரமாக இருக்கும். தந்தையார் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பார்கள். வியாபாரிகளுக்கு குறிப்பிட்ட பொருள்களின் மூலம் சில நஷ்டங்களையும் சந்திக்க வேண்டி வரும். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விவசாயிகள் புதிய நிலங்களை குத்தகைக்கு எடுப்பீர்கள். நீர் வளம் மிகுந்திருப்பதால் விளைச்சல் அதிகரித்து லாபம் கூடும். 

அரசியல்வாதிகள் தங்கள் பேச்சு, செயல், நடவடிக்கைகள் அனைத்திலும் நிதானத்தைக் கடைப்பிடித்து வாருங்கள். முன் கோபத்தைக் குறைத்தால் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். 

கலைத்துறையினருக்கு செயல்பாடுகளில் புதிய வேகம் பிறக்கும். எடுத்த காரியங்களைத் தங்குதடையின்றி முடித்துக் கொடுப்பீர்கள். பெண்மணிகள் உடலாரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவீர்கள். கணவருடன் ஒற்றுமை மேலோங்கும். மாணவமணிகள் உயர்கல்வி கற்பதற்காக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். 

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 08, 09. சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் மதிப்பு மரியாதைக்கு பங்கம் ஏற்படாமல் நடந்து கொள்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் சில குழப்பங்கள் ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களை அனுசரித்து நடந்து கொண்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். எச்சரிக்கையுடன் செயல்படவும். விவசாயிகளுக்கு அரசு மானியங்கள் கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படும். மகசூல் அதிகரித்து லாபம் அடைவீர்கள்.  

அரசியல்வாதிகள் உறுதியான மனதுடன் செயல்பாடுகளில் நேரில் களமிறங்கி வெற்றி பெறுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய பொறுப்புகளைப் பெற்று மகிழ்வீர்கள். கலைத்துறையினர் பலமுறை யோசித்து செயலில் இறங்குவீர்கள். சக கலைஞர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவர் குடும்பத்தாருடன் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். தாய் வழியில் சில ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவமணிகள் கல்வியில் மேன்மையான நிலையை எட்டிப் பிடிக்க முயற்சி செய்வீர்கள். யோகா, தியானம், பாராயணம் செய்து மனவலிமையை பெறுவீர்கள்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 06, 09. சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

புனித பயணங்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எவரிடமும் அநாவசிய பேச்சுக்களை வைத்துக்கொள்ள வேண்டாம். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் உதவியால் அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் புதிய கடைகளை விரிவுபடுத்தி வெற்றி காண்பீர்கள். போட்டிகளைச் சமாளித்து விற்பனையில் லாபம் ஈட்டுவீர்கள். விவசாயிகள் கால்நடைகளின் மூலம் லாபம் காண்பீர்கள். புதிய குத்தகைகள் மூலம் வருமானம் பெருகி சந்தோஷம் அடைவீர்கள். 

அரசியல்வாதிகள் தொண்டர்களைப் பகைத்துக் கொள்ளாமல் அனுசரணையுடன் நடந்து கொள்ளவும். உட்கட்சிப் பூசலை தவிர்க்கவும். கலைத்துறையினர் தங்கள் படைப்புகளால் மக்கள் மனதில் நல்ல இடம் பிடிப்பீர்கள். விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கும்.

 பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மிகுந்த சந்தோஷமான சூழல் நிலவும். புதிய ஆடை அணிகலன்களின் சேர்க்கை நிகழும். மாணவமணிகள் பெற்றோர், ஆசிரியரின் ஆதரவுடன் படிப்பில் மிகுந்த ஆர்வம் செலுத்துவீர்கள். சோதனைகளைக் கண்டு துவளாமல் வெற்றிப் பாதையை அடைவீர்கள். 
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 08, 10. சந்திராஷ்டமம்: இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com