

சீனாவில் பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்பட்ட சர்வதேச உய்குர் கூட்டமைப்புத் தலைவர் துல்குன் இசாவுக்கு இந்தியா வழங்கிய நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது.
அண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அஸாருக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை சீனா முறியடித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவால் பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்படும் உய்குர் முஸ்லிம் தலைவருக்கு இந்தியா நுழைவு இசைவு வழங்கியது.
இதற்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்ததாலும், இன்டர்போல் பட்டியலில், துல்குன் இசா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பதாலும், இந்தியா இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
தர்மசாலாவில் அடுத்த வாரம் சர்வதேச ஜனநாயக மாநாடு நடைபெறவுள்ளது. இதில் திபெத் பெளத்த மதத் தலைவர் தலாய் லாமாவும் பங்கேற்கவுள்ளார். ஜெர்மனியில் உள்ள துல்குன் இசா, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நுழைவு இசைவு வழங்கக் கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தார். இதனைப் பரிசீலித்த வெளியுறவு அமைச்சகம் அவர் இந்தியாவுக்கு வர கடந்த வாரம் அனுமதி அளித்தது.
சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கம். சீனாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட உய்குர் மக்களை துல்குன் இசா தூண்டுவிடுவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.