ஜகார்தா: தங்கள் நாட்டில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன், நடுத்தெருவில் பொதுமக்களுடன் இந்தோனேசிய அதிபர் நடனமாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தோனேசிய நாட்டில் 2018-ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் ஆகஸ்டு 18-ந்தேதி துவங்கி, செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு உலக சாதனைக்காக அந்நாட்டின் தெருக்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் ஒன்று கூடி, 'போகோ போகோ' என்னும் பாரம்பரிய நடனம் ஆடும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடபெறச் செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அதன்படி ஆயிரக்கணக்கானோர் வரிசையாக ஜகர்த்தா நகரின் தெருக்களில் கூடி நின்று நடனம் ஆடினர். இதனை தவிர்த்து நாடு முழுவதும் உள்ள 500 சிறைச்சாலைகளில் அடைபட்டுள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் கைதிகளும் இந்த நடனத்தினை ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது. .
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவும் கலந்து கொண்டு பொதுமக்களுடன் சேர்ந்து நடனம் ஆடியாது பரவலான கவனத்திற்குள்ளானது.