இலங்கையில் தஞ்சம் புகுந்திருந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் நாடு திரும்பினார்
மாலே: சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க இலங்கையில் தஞ்சம் புகுந்திருந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பினார்.
மாலத்தீவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிபராக இருந்தவர் முகமது நஷீத். அவர் கடந்த 2012ம் ஆண்டு நீதிபதி ஒருவரை கைது செய்யும்படி உத்தரவிட்டிருந்தார். இதன் காரணமாக அவர் தீவிரவாதத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2015ம் ஆண்டு அவருக்கு 13 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டப்பூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றாமல் நடந்த இந்த வழக்கு விசாரணைக்கு சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. சிறையில் அடைக்கப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு சென்றபொழுது அவருக்கு அங்கு அரசியல் தஞ்சமளிக்க அந்நாடு முன்வந்தது.
ஆனால் அவர் அதை விடுத்து கடந்த 2 வருடங்களாக இலங்கையில் தஞ்சம் புகுந்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய அதிபர் தேர்தலில் யாமீன் அப்துல் கயூம் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து நஷீத் நாடு திரும்ப முடிவு செய்தார்.
அதன்படி அவர் இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு வியாழனன்று வந்து சேர்ந்தார். அவருக்கு அவரது கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

