இஸ்லாமாபாத்: இனி இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அரசியல் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்த இந்தியா, அத்துடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது.
இதுதொடர்பாக கடும் அதிருப்தியை தெரிவித்த பாகிஸ்தான் இந்த பிரச்சினையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக செய்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. அதேசமயம் இந்தியாவுடனான பிரச்சினையை பாகிஸ்தான் பேச்சு வார்த்தையின் மூலமாக மட்டுமே சுமுகமாகத் தீர்க்க வேண்டும் என்று பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தியுள்ள்ளன.
இந்நிலையில் இனி இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
இனி அவர்களிடம் பேசுவதில் பயன் எதுவும் இலலை. அவர்களிடம் ஏற்கனவே போதுமான அளவுக்கு பேசிவிட்டேன் என்பதைக் தான் குறிப்பிடுகிறேன். தற்போது நான் பழைய விஷயங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, துரதிர்ஷ்டவசமாக சமாதானம் மற்றும் பேச்சுவார்த்தைக்காக நான் எடுத்த முயற்சிகளை எல்லாம் இந்தியா ஏதோ அவர்களை திருப்திப்படுத்துவதற்காக செய்த ஒன்றாக எடுத்துக் கொண்டுள்ளது. இதற்கு மேல் இதில் நாங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.