புல்வாமா தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தனது ஜப்பான் பயண திட்டத்தை ஒத்தி வைத்துள்ளார்.
முன்னதாக, முகமது குரேஷி இம்மாதம் 24 முதல் 27-ஆம் தேதி வரையில் ஜப்பான் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அந்நாட்டு பிரதமர் ஷின்úஸா அபேவையும், வெளியுறவு அமைச்சர் டாரோ கோனோவையும் சந்தித்து பேச்சு நடத்த இருப்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ கோனோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முகமது குரேஷி, தனது ஜப்பான் பயணம் ஒத்திவைக்கப்படுவதற்கான காரணத்தை அவரிடம் விளக்கினார்.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீர் உள்ளிட்ட தெற்காசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், இந்தத் தீவிரமான சூழலில் தாம் பாகிஸ்தானில் இருக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என்றும் டாரோ கோனோவிடம், முகமது குரேஷி கூறியதாக பாகிஸ்தான் அரசு வானொலியான ரேடியோ பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, இருதரப்பு சந்திப்பை மீண்டும் விரைந்து நடத்த இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இந்நிலையில், தற்போது நிலவும் பதற்றமான சூழலை தணிக்கத் தேவையான பங்களிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா. பொதுச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும்,
அத்தகைய நடவடிக்கைக்கு உதவுமாறு ஜப்பானை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் முகமது குரேஷி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







