வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அதிபர் மாளிகை இருக்குமிடத்துக்கு அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்; 5 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
வாஷிங்டனில், வெள்ளை மாளிகைக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள கொலம்பியா ஹைட்ஸ் என்ற பகுதியில் வியாழக்கிழமை இரவு சுமார் 10.06 மணிக்கு மர்ம நபர் நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
வெளிர் நிற நிஸான் காரில் வந்த அவர், ஏ.கே.47 போன்றதொரு துப்பாக்கியைக் கொண்டு நடத்திய அந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; 5 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தக் காரையும், அதில் இருந்த இரு நபர்களையும் தேடி வருகிறோம்.
அந்தத் தாக்குதல் நடைபெற்ற ஒரு மணி நேரம் கழித்து, 4 கி.மீ. தொலைவுக்கு அப்பால் மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. அந்தச் சம்பவத்திலும் மூவர் காயமடைந்தனர். அந்தத் தாக்குதலுக்கும், கொலம்பியா ஹைட்ஸில் நடைபெற்ற தாக்குதலுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.