டெல்டா வகை உருமாறிய கரோனா பரவல் காரணமாக இந்திய விமானங்களுக்கான தடையை ஆகஸ்ட் 21 வரை நீட்டித்து கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்துள்ளது.
இந்நிலையில் ஜூலை 21ஆம் தேதி வரை இந்திய விமானங்களுக்கான தடை அமலில் இருந்த நிலையில், அதனை ஆகஸ்ட் 21 வரை நீட்டித்து கனடா அரசு இன்று அறிவித்துள்ளது.
அதேவேளையில் பிற நாடுகளின் வழியாக கனடா வரும் இந்தியப் பயணிகள் கரோனா சோதனை சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவில் தற்போது கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், இதே நிலை நீடிக்கும்பட்சத்தில், செப்டம்பர் 7 முதல், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை நாட்டுக்குள் அனுமதிக்க முடிவெடுக்கப்படும் என்றும், கனடாவுக்குள் நுழைய 14 நாள்களுக்கு முன்னதாக கரோனா தடுப்பூசி முழு தவணையையும் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வகை கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி இந்திய விமானங்களுக்கு கனடா தடை விதித்த நிலையில், தற்போது 4வது முறையாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.