காற்று மாசு காரணமாக 40 சதவிகித இந்தியர்களின் ஆயுள் 9 ஆண்டுகளுக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது என அமெரிக்கா ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி உள்பட மத்திய, கிழக்கு மற்றும் வட இந்திய பகுதிகளில் வாழும் 4 கோடியே 80 லட்சத்திற்கும் மேலானவர்கள் உயர்ந்த காற்று மாசு அளவின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், "இந்தியாவின் உயர்ந்த அளவிலான காற்று மாசு காலபோக்கில் புவியியல் ரீதியாக விரிவடைந்துள்ளது. இது பெரிய ஆபத்து. எடுத்துக்காட்டாக, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவில் காற்றின் தரம் மோசமாகியுள்ளது. 2019ஆம் ஆண்டு, இந்தியாவில் தொடங்கப்பட்ட தேசிய தூய்மை காற்று திட்டம் ஆபாயகரமான மாசுவை கட்டுப்படுத்துவதில் சாதனை படைத்துள்ளது. அதன் இலக்கை தக்கவைத்துள்ளது. இதன் மூலம், நாட்டு மக்களின் மொத்த ஆயுள் 1.7 ஆண்டுகளாக உயரும். குறிப்பாக, தில்லி மக்களின் ஆயுள் 3.1 ஆண்டுகள் அதிகரிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 102 நகரங்களின் மாசுவை 20 லிருந்து 30 சதவிகிதம் வரை குறைப்பதை தேசிய தூய்மை காற்று திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியில் தலிபான்கள்
தொழிற்சாலைகளின் உமிழ்வுகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுவை குறைப்பது, உயிரி எரிப்பதிலும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் பயன்பாட்டிலும் கடுமையான விதிகளை அமல்படுத்துவது, தூசி மாசுவை குறைப்பது, கண்காணிப்பு உபகரணங்களை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை தேசிய தூய்மை காற்று திட்டம் இலக்காக வைத்துள்ளது.
ஐக்யூ ஏர் என்ற சுவிட்சர்லாந்து ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், உலகின் மாசு அதிகமுள்ள தலைநகரங்களின் பட்டியலில் தில்லி தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்தது குறிப்பிடப்பத்தக்கது.