சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஒவ்வொரு நாடும் தங்களுடைய குடிமக்களை அங்கிருந்து அழைத்துச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவும் அங்குள்ள தங்கள் நாட்டு குடிமக்களை மீட்டு வருகிறது.
இந்நிலையில் தலிபான்கள் 'மக்களை வெளியேற்றும் பணியை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதற்கு பின் கெடு நீட்டிப்பு கிடையாது. உள்ளே வருகிற விமானங்கள் சிறைபிடிக்கப்படும்' என கூறியிருந்ததால் மக்களை மீட்கும் பணியை அமெரிக்கா தீவிரபடுத்தி வருகிறது.
இதையும் படிக்க | ஜெர்மனியில் உணவு விநியோகம் செய்யும் ஆப்கன் முன்னாள் அமைச்சர்
நேற்று முன்தினம் ஆக- 23ம் தேதி காலை தொடங்கி நேற்று 24ம் தேதி காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 21,600 பேரை அமெரிக்கா வெளியேற்றி இருக்கிறது.
37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12 ஆயிரத்து 700 பேரையும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8,900 பேரையும் மீட்டு இருக்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ' கெடு முடிவதற்குள் அனைத்து குடிமக்களும் பத்திரமாக அமெரிக்காவிற்கு அழைத்து வரப்படுவார்கள் ' எனத் தெரிவித்திருக்கிறார்.