அடுத்து என்ன செய்வார், எப்படி நடந்து கொள்வார் என சற்றும் கணிக்க முடியாத நபராக இருப்பவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். ட்விட்டரின் நிர்வாக குழுவில் இணைய மறுத்திருப்பதன் மூலம் இதை மீண்டும் நிரூபித்துள்ளார் அவர்.
ட்விட்டர் நிர்வாக குழு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு, அப்பாவி போன்று பாவனை செய்யும் இமோஜியை எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நிர்வாக குழுவில் எலான் மஸ்க் இணைவார் என அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அவர் இணையப்போவதில்லை என ட்விட்டரி்ன் தலைமை செயல் அலுவலர் பாரக் அகர்வால் நேற்று அறிவித்தார்.
இதையும் படிக்க | நேட்டோவில் இணையுமா பின்லாந்து? மாறி வரும் புவி அரசியல்
இதுகுறித்து அகர்வால் ட்விட்டர் பக்கத்தில், "ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அவர் நிர்வாக குழு உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக செயல்படவிருந்தார். ஆனால், அதே நாள் காலை, நிர்வாக குழுவில் இணைய போவதில்லை என அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த முடிவு நல்லதுக்கு என நான் நம்புகிறேன்" என பதிவிட்டார்.
ட்விட்டரின் பெரும்பாலான பங்குகளை எலான் மஸ்க் வாங்கியதை தொடர்ந்து, நிர்வாக குழுவில் அவர் இணைவார் என அறிவிக்கப்பட்டது. உலகின் பணக்காரர்களில் முதல் இடத்தில் உள்ள எலானை ட்விட்டரில் 80 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். இதனிடையே, ட்விட்டரின் 9.2 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளதாக எலான் கடந்த வாரம் தெரிவித்தார்.
ட்விட்டரின் மிக பெரிய பங்குதாரரான எலானின் யோசனைகளை தொடர்ந்து வரவேற்போம் என பாரக் அகர்வால் குறிப்பிட்டிருந்தார்.