2023ஆம் ஆண்டு உக்ரைன் தலைநகர் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்காக 2 லட்சம் வீரர்களுடன் ரஷிய ராணுவம் தயாராகி வருவதாக உக்ரைன் தலைமை தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரிட்டிஷ் வீக்லி செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், உக்ரைன் - ரஷியா இடையிலான போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் இல்லை. உக்ரைனில் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளைக் குறிவைத்து ரஷிய ராணுவத்தினர் தாக்கி வருகின்றனர். ஆனால், தற்போது மீண்டும் உக்ரைன் தலைநகர் (கீவ்) மீது ரஷியா குறிவைத்து வருகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ரஷியா இதற்காக புதிதாக 2 லட்சம் வீரர்களைத் தயார்ப்படுத்தி வருகிறது.
எங்கள் தரப்பில் தேவையான பீரங்கிகள், ஆயுதங்களை கணக்கிட்டு வருகிறோம். தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள எங்கள் கடைநிலை வீரர்கள் வரை இதனைத் தெரிவிப்பதே தற்போது எங்களுக்கு உள்ள முதன்மை பிரச்னை. நாங்கள் இனி எங்களின் எந்த நிலப்பகுதியையும் இழக்கத் தயாராக இல்லை. வடகிழக்கு கார்கீவ் நகரிலிருந்தும், தெற்கு கெர்சன் நகரிலிருந்தும் பதிலடி கொடுத்து ரஷிய வீரர்களை விரட்டியதைப் போன்று செயல்படுவோம்.
நாங்கள் ரஷியாவைக் கட்டாயம் வீழ்த்துவோம். ஆனால் அதற்கு எங்களுக்கு மூலாதார உதவிகள் தேவை. எங்களுக்கு 300 பீரங்கிகள், 600 - 700 இலகு ரக போர் விமானங்கள், 500 வெடிகுண்டு வீசும் கருவிகள் தேவை எனக் குறிப்பிட்டார்.