அமெரிக்காவின் மினசோட்டா பகுதியில் கொளுத்தும் வெயிலில் காருக்குள் மனிதருடன் வளர்ந்து வந்த 47 பூனைகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து பூனைகள் மீட்கப்பட்டு காப்பகங்களில் விடப்பட்டன.
இது குறித்து பூனையினை மீட்ட வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: “ மினசோட்டாவில் வசித்து வரும் ஒருவர் சமீபத்தில் தங்குவதற்கு இடமில்லாமல் காரில் தங்கியுள்ளார். அப்போது தன்னுடன் இருந்த பூனைகளை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் காரிலேயே வளர்த்து வந்துள்ளார். இந்தப் பூனைகளின் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து, நாங்கள் அந்த நபரை தொடர்பு கொண்டோம். வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பூனைகளை காரிலிந்து பாதுகாப்பான காப்பகத்துக்கு மாற்ற வேண்டும் என்றோம். எங்களது கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டார்.” என்றனர்.
அதன்பின் அந்த 47 பூனைகளும் காரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டன. பூனைகளின் வயது 1-ல் இருந்து 12 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பூனைகளின் உடல்நலம் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் அவைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு காப்பகத்தில் விடப்பட்டது. பல நாட்கள் காரில் வெயிலில் வளர்ந்து வந்த போதிலும் பூனைக்குட்டிகள் நல்ல ஆரோக்கியமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.