பிரிட்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கும் அவரது நீண்ட நாள் தோழி ஸ்டெல்லா மோரிசுக்கும் புதன்கிழமையன்று திருமணம் நடைபெற்றது. எளிமையாக நடத்தப்பட்ட நிகழ்வில் இரண்டு அதிகாரப்பூர்வ சாட்சியாளர்கள், இரண்டு பாதுகாவலர்கள் என நான்கு பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமண நிகழ்ச்சி முடிந்த பின் பெல்மார்ஷ் சிறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெல்லா, "நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் மிகவும் வருத்தமாகவும் இருக்கிறேன். நான் ஜூலியனை முழு மனதுடன் நேசிக்கிறேன். அவர் என்னுடன் இங்கே இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
எங்களுக்கு நடந்து கொண்டிருப்பது கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு இந்த சூழ்நிலையிலும் மற்ற எந்த சூழ்நிலையிலும் நம்மை கொண்டு செல்கிறது. அவர் உலகின் மிக அற்புதமான மனிதர். அற்புதமானவர். அவர் சுதந்திரமாக இருக்க வேண்டும்" என்றார்.
அமெரிக்க ராணுவம் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான ரகசிய தகவல்களை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். 18 வழக்குகளில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி அவரை நாடு கடத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 50 வயதே ஆன ஜூலியன் அசாஞ்சே, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தென்கிழக்கு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு, பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக அவர் ரகசியமாக வாழ்ந்து வந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு, ஸ்டெல்லாவை அசாஞ்சே முதல்முறையாக சந்திக்கிறார். பின்னர், அசாஞ்சேவின் வழக்கறிஞர் அணியில் பணியாற்ற தொடங்குகிறார்.
இதையும் படிக்க | ஒரு மாதத்தை எட்டியது உக்ரைன்- ரஷியா போா்
இதையடுத்து, 2015ஆம் ஆண்டு இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். தூதரகத்தில் வசித்துவந்த போதே, இருவரும் இரண்டு குழந்தைகளை பெற்று கொண்டனர். சிறையில் பார்வையாளர்கள் நேரத்தின் போது, பதிவாளர் தலைமையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த பிறகு உடனடியாக விருந்தினர்கள் வெளியே அனுப்பப்பட்டனர்.
இந்த மாதம் தொடக்கத்தில், நாடு கடத்தலுக்கு எதிராக பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.