பெண் கல்விக்காக குரல் கொடுத்த ஒரே காரணத்துக்காக, தலிபான்களால் தலையில் சுடப்பட்ட போது மலாலாவுக்கு 15 வயது. சம்பவம் நடந்து சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின், பாகிஸ்தான் மண்ணில் கால் பதித்துள்ளார் மலாலா.
அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மலாலா, பாகிஸ்தானுக்கு வந்து, அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, வாழ்வா? சாவா? என்ற நிலையில் பாகிஸ்தானிலிருந்து பிரிட்டனுக்கு அவசர சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டவர் மலாலா. பிறகு சர்வதேச கல்வி ஆலோசகராகவும், இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவராகவும் திகழ்கிறார்.
தலிபான்களால் தாக்குதலுக்கு உள்ளாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தனது சொந்த நாட்டுக்கு இரண்டாவது முறையாக திரும்பினார் மலாலா. கராச்சியில் தரையிறங்கிய அவர், நேராக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்த்தார்.
இதையும் படிக்க | பழனி - கொடைக்கானலுக்கு ரோப் காா்: அறிய வேண்டிய அனைத்து தகவல்களும்
பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச கவனம் மற்றும் மனிதாபிமான உதவி கிடைக்கும் வகையில், மலாலாவின் இந்தப் பயணம் அமைந்துள்ளதாக மலாலா நிதி என்ற அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது.