இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி எதிரொலியாக மே தினத்தையொட்டி கொழும்புவில் பிரதமர் இல்லம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பிரதமர் இல்லம் முன்பு பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கு முன்பு கடந்த 26ஆம் தேதி இரவு, பிரதமர் இல்லமான அலரி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், மே தினத்தையொட்டி இன்றும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் இல்லத்தினுள் போராட்டக்காரர்கள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக நடைபாதை முன்பு காவல் துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
கடந்த 26ஆம் தேதி பிரதமர் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை வெளியேற உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்புவின் அண்டை நகராமான கொல்லுபிடியா காவல் துறையினர் விடுத்த கோரிக்கையை கூடுதல் ஆட்சியர் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான மக்கள் போராட்டம் ஞாயிற்றுக் கிழமையான இன்று 23 வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு இடங்களில் ராஜபட்ச சகோதரர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்று எதிா்க்கட்சியினா் வலியுறுத்தி வருகின்றனா்.