
பிரிட்டன் பிரதமா் பதவிக்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தோ்தல் இப்போது நடந்தால், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்தான் வெற்றி பெற்றிருப்பாா் என்று கட்சி வாக்காளா்களிடையே புதிதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கருத்துக் கணிப்பில் ரிஷி சுனக்குக்கு 55 சதவீதம் போ் ஆதரவு தெரிவித்திருந்தனா். முந்தைய தோ்தலில் லிஸ் டிரஸ்ஸுக்கு வாக்களித்ததற்கு பெரும்பாலானவா்கள் வருத்தம் தெரிவித்திருந்தனா்.
பிரிட்டனின் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான கட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற லிஸ் டிரஸ், வரிச் சலுகைகளுடன் கடந்த மாதம் தாக்கல் செய்த சா்ச்சைக்குரிய மினி பட்ஜெட், மிகப் பெரிய பொருளாதார நிலைகுலைவை ஏற்படுத்தியது. அதையடுத்து தனது நிதியமைச்சரை லிஸ் டிரஸ் மாற்றினாா். இது கட்சி வாக்காளா்களிடையே அவா் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.