கம்போடியாவின் கோ தங் தீவு அருகே படகு மூழ்கியதில் ஒருவர் பலியாகியுள்ளனர், 20 பேர் மாயமாகியுள்ளதாக கம்போடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழனன்று தீவுக்கு அருகில் 40 சீனர்களுடன் மீன்பிடிக் கப்பல் ஒன்று திடீரென கடலில் மூழ்கியது. இதையடுத்து, 18 பேர் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டனர். மேலும் 23 பேர் மாயமாகியுள்ளனர். இன்று காலை ஒருவர் பிணமாக மீட்கப்பட்டதாக மாகாண காவல்துறை தலைவர் தெரிவித்தார்.
படகில் பயணித்த கம்போடியர்கள் இருவர், இயந்திரம் பழுதடைந்ததையடுத்து, படகைக் கைவிட்டு பயணிகளை ஏற்றிச் செல்ல வந்த மற்றொரு படகில் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பெய்ஜிங்கில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கம்போடியா அதிகாரிகளுடன் தனது அரசு தொடர்பில் உள்ளது. காணாமல் போனவர்களைத் தேடுவதற்கும் மீட்பதற்கும், விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளக் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று அவர் கூறினார்.
வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கப்பல் மூழ்கத் தொடங்கியபோது அதில் 38 ஆண்களும் மூன்று பெண்களும் இருந்ததாக, படகிலிருந்து மீண்டவர்கள் தெரிவித்தனர். மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள கம்போடிய கடற்படை தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கம்போடியாவின் மேற்கு கடற்கரையில் மூழ்கிய படகு எங்கிருந்து புறப்பட்டது என்ற எந்த விவரமும் அறியப்படவில்லை.