அமெரிக்க வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு பலூன்கள் மூலம் சீனா இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை உளவுபார்க்க திட்டமிட்டிருந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற உளவு பலூன்களை, பல ஆண்டு காலமாக சீனா பயன்படுத்திவருவதாகவும், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சீனா உளவு பார்த்திருப்பதாகவும் அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிக்க.. இன்னுமா திடுக்கிடும் தகவல்கள்? ஷ்ரத்தா கொலையில் தீராத அதிர்ச்சி
எப்போது சீன பலூன் இந்தியாவை உளவு பார்த்தது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி, 40 நாடுகளின் தூதரக அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் அமெரிக்க துணைச் செயலாளர் பல்வேறு தகவல்களை அளித்துள்ளார். அப்போது அவர் மேற்கண்ட தகவல்களை அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க வான்பரப்பில் சீன உளவு பலூன் கண்டறியப்பட்ட நிலையில், தென் அமெரிக்க கண்டத்தின் மீது மற்றொரு உளவு பலூன் பறந்து வந்ததாகவும் அது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்திருந்தது.
அமெரிக்க வான்பரப்பில் சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட பலூன் பறந்தது. அது சீனா அனுப்பிய உளவு பலூன் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. அந்த பலூன் தங்கள் நாட்டைச் சோ்ந்ததுதான் என ஒப்புக்கொண்ட சீனா, அது உளவு பலூன் இல்லை என விளக்கமளித்தது. வானிலை விவரங்களைச் சேகரிப்பதற்கான கருவியே பலூனில் இடம்பெற்றுள்ளதாக சீனா தெரிவித்தது. காற்று வீசும் திசை மாறியதன் காரணமாக அந்த பலூன் அமெரிக்க வான் பரப்புக்குள் எதிா்பாராமல் நுழைந்ததாகவும் சீனா தெரிவித்தது. அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் சீனா கூறியது.
அமெரிக்காவில் சீன பலூன் உளவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக பென்டகன் குற்றஞ்சாட்டியதையடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தனது சீனப் பயணத்தை ஒத்திவைத்தாா்.
இதையும் படிக்க.. பெற்றோரே.. கூடுகள் காலியாகும் நோயை எதிர்கொள்வோம்!
இந்நிலையில், தென் அமெரிக்கா மீது மற்றொரு சீன உளவு பலூன் பறப்பதாக பென்டகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. அந்த பலூன் தென் அமெரிக்க கண்டத்தின் எந்த நாட்டின் மீது பறந்துவருகிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை என்றும், அமெரிக்காவை நோக்கி அந்த பலூன் பறக்கவில்லை என்றும் சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.