தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இன்று காலைமுதல் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தஜிகிஸ்தான் நாட்டில் சீன எல்லைப் பகுதிகளில் இன்று காலை 6.07 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது அண்டை நாடுகளான சீனா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து 4 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஃபைசாபாத்தில் இருந்து 265 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காலை 6.07 மணிக்கு ரிக்டர் அளவில் 6.7 ஆகவும், காலை 6.25 மணிக்கு ரிக்டர் அளவில் 5 ஆகவும், காலை 7.05 மணிக்கு ரிக்டர் அளவில் 5.2 ஆகவும், காலை 7.37 மணிக்கு ரிக்டர் அளவில் 4.8 ஆகவும் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சுனாமி குறித்த எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களை தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புப் படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இரு வாரங்களுக்கு முன்பு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 45,000 பேர் பலியான நிலையில், அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்ட ஆப்கன் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.