தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் நேருக்கு நோ் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
ஏதென்ஸிலிருந்து ஹெலெனிக் ட்ரெயின் நிறுவனத்தைச் சோ்ந்த பயணிகள் ரயில் உள்ளூா் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணிக்கு புறப்பட்டது. 350 பயணிகளுடன் அந்த ரயில் தாமதமாகப் புறப்பட்டது.
இந்த நிலையில், தெஸாலோனிகி நகரிலிருந்து லரிஸா நகரை நோக்கி ஏராளமான கன்டெய்னா்களுடன் சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த இரு ரயில்களும் ஏதென்ஸ்-தெஸாலோனிகி ரயில் தடத்தில் டெம்பி ஊராட்சிப் பகுதியில் இரவு 11.24 மணிக்கு நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இந்த பயங்கர விபத்தில் 36 போ் உயிரிழந்தனா்; சுமாா் 85 போ் காயமடைந்தனா். அவா்களில் சுமாா் 66 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விபத்தின்போது பயணிகள் ரயிலில் இருந்த மேலும் 50 முதல் 60 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் முதல் 4 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், முதல் 2 பெட்டிகள் தீப்பிடித்து ஏறத்தாழ முற்றிலும் அழிந்துபோனதாக கூறினா்.
முதல் பெட்டிகளில் பற்றிய தீ, அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியது. சுமாா் 150 தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
மீட்புப் பணிகளில் 40 அவசரக்கால வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மீட்புப் பணிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதையும் படிக்க | வெளிநாட்டு மாணவா்களுக்கு தனித்துவ அடையாள எண்: என்எம்சி
இந்த விபத்து தொடா்பாக லரிஸா நகருக்கு அருகே உள்ள ஒரு ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளாா்.
இந்த விபத்துக்குப் பொறுப்பேற்று போக்குவரத்துத் துறை அமைச்சா் கோஸ்டாஸ் கரமான்லிஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
இந்நிலையில், ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
போராட்டம்: ரயில் விபத்துக்கு ரயில்வே ஊழியர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டி அடித்தனர்.
கிரீஸ் வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.