இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் படகுகள் மூலம் சட்டவிரோதமாக லண்டன் வருவதாக இங்கிலாந்து தலைமை அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் வேலைவாய்ப்பிற்காக அதிக அளவிலான இந்தியர்கள் சிறிய படகுகள் மூலம் லண்டனுக்குள் நுழைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதில் அதிக அளவாக பஞ்சாப், குஜராத், தில்லி போன்ற பகுதிகளிலிருந்து வருவதாகவும் இங்கிலாந்து தலைமை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை 3,793 பேர் சிறிய படகுகள் மூலம் லண்டன் வந்துள்ளனர். இவர்களில் ஆப்கானிஸ்தானியர்கள் 909 பேர் (24%), இந்தியர்கள் 675 பேர் (18%) என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் பிரான்ஸிலிருந்து 683 இந்தியர்கள் சிறிய படகுகள் மூலம் கடலைக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக வரும் இந்தியர்கள் பெரும்பாலும் 18 - 35 வயதுக்குட்பட்டவர்களாகவே உள்ளனர்.
லண்டனில் பணியாளர் விசா பெற்று வருவது மிகவும் கடினமான செயல் என்பதால், சட்டவிரோதமாக வருவது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.