இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு அக்டோபர் 7ஆம் தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த சண்டையால் இருபுறமும் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
காஸா பகுதியின் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் வடக்கு காஸாவில் வசிக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறி கெடு விதித்துள்ளது.
இவ்வாறு கடுமையான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பல்வேறு சர்வதேச நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்களை இஸ்ரேலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தியா ஆப்ரேஷன் அஜய் என்ற பெயரில் இந்திய குடிமக்களை இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்தது.
இதையும் படிக்க: பாக். எதிரான போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் தேர்வு!
இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளும் அவர்கள் நாட்டு மக்களை இஸ்ரேலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இதன்படி, டெல் அவிவ் விமான நிலையத்தில் பொதுமக்கள் வெளியேற உதவி செய்யும் வகையில் உதவி மையங்களை அமைத்துள்ளன. அவற்றின் உதவியுடன் பொதுமக்கள் இஸ்ரேலில் இருந்து வெளியேற வழிவகை செய்யப்பட்டு உள்ளன.