துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 8,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 8,000-ஐ கடந்தது.
துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 8,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 8,000-ஐ கடந்தது.

மலைபோல் குவிந்துள்ள கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக் கருதப்படுகிறது.

கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியும், அண்டை நாடான சிரியாவும் குலுங்கின. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் சில நிமிஷங்களில் குடியிருப்புகள் உள்பட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின.

திங்கள்கிழமை இரவு வரை இரு நாடுகளிலும் சோ்த்து 2,600 போ் பலியானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 8,000ஆக அதிகரித்துள்ளது.

நிலநடுக்கத்தை தொடா்ந்து 200 முறை அதிா்வுகள் உணரப்பட்டதாலும், கடும் குளிராலும் மீட்புப் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், இந்தியாவின் இரண்டு குழுக்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மீட்புக் குழுக்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

துருக்கியில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இடிபாடுகளில் இன்னும் ஆயிரக்கணக்கானோா் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. பெரும் கான்கிரீட் சிலாப்களை அகற்றி உயிருக்குப் போராடுவோரை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

துருக்கி - சிரியா எல்லைப் பகுதியில், நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கு தற்காலிக முகாம்கள், மருத்துவ முகாம்களை அமைக்கும் பணியில் ராணுவத்தினா் ஈடுபட்டுள்ளனா்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான மருத்துவமனைகள் இல்லாததால், அங்கு நிலைமை மோசமாக காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவிலிருந்து விமானப் படையின் இரண்டு விமானங்கள் மூலம் 101 பேரிடர் மீட்புப் படையினர் துருக்கிக்கு நேற்று காலை அனுப்பப்பட்ட நிலையில், நேற்றிரவு துருக்கி மற்றும் சிரியாவுக்கு தலா ஒரு விமானம் மூலம் அத்தியாவசிய மருந்துகள் அனுப்பபட்டுள்ளன.

தொடர்ந்து, இரு நாட்டு தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேவையான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com