புதினின் போர் தலைமையகத்துக்கு அருகே டிரோன் தாக்குதல்: அவசர நிலை

ரஷிய அதிபர் புதினின் போர் கட்டளைகளைப் பிறப்பிக்கும் தலைமையகத்திற்கு அருகே மிகப்பெரிய ஃபயர்பால் குண்டு வெடித்த நிலையில், அப்பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
russia095856
russia095856

ரஷிய அதிபர் புதினின் போர் கட்டளைகளைப் பிறப்பிக்கும் தலைமையகத்திற்கு அருகே மிகப்பெரிய ஃபயர்பால் குண்டு வெடித்த நிலையில், ரோஸ்டோவ்-ஆன்-டான் பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

காமிகேஸ் ட்ரோன்கள் மூலம் ரஷ்ய நகரத்தில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு, வெடிக்கச் செய்த நிலைநிலையில், மிகப்பெரிய ஃபயர்பால் வெடிகுண்டு ஒன்று, போர் கட்டளை தலைமை அலுவலகத்துக்கு அருகே வெடித்ததால், 'அவசரகால நிலை' அறிவிக்கப்பட்டது

ரஷ்ய படைகள் ஆக்ரமிக்க உக்ரைன் பகுதிக்கு அருகே உள்ள ரோஸ்டோவ் - ஆன் - டான் பகுதியில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், போர் கட்டளைகளை பிறப்பிக்கும் தலைமையகத்துக்கு அருகே காமிகேஸ் டிரோன்கள் மூலம் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ராணுவ தலைமையகக் கட்டடத்துக்கு அருகே பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. 

நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலால், பல கட்டடங்கள் கொழுந்துவிட்டு எரிவதால், அப்பகுதியின் வான் பரப்பில் மிகப்பெரிய புகைமூட்டம் காணப்பட்டது.

மூன்று கட்டங்கள் மற்றும் ஏராளமான கார்கள் வெடிகுண்டு தாக்குதலில் நாசமானதாக ரோஸ்டோவ் மாகாண ஆளுநர் வாஸிலி கொலுபேவ் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் காரணமாக, பல முக்கிய சாலைகளில் இருக்கும் குடியிருப்புகளில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு உடனடியாக உணவுகள் வழங்கப்பட்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

கடந்த ஜூன் மாதம், விமான விபத்தில் கொல்லப்பட்ட வாக்னர் மற்றும் வீரர் யெவ்ஜெனி பிரிகோஜின் ஆகியோர் புதின் ஆட்சிக்கு எதிராக தனது சதி முயற்சியை இந்த இடத்தில் இருந்துதான் தொடங்கினர், பின்னர் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நகரத்தின் வணிக மையத்தை குறிவைத்து வந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய அதிகாரிகள் கூறினர்.

ஆளில்லா தாக்குதல் விமானங்கள் (ட்ரோன்) மூலம் ரஷியாவுக்குள் உக்ரைன் இதுவரை இல்லாத மிகத் தீவிரமான தாக்குதலை கடந்த வாரம் நடத்தியது.

இது குறித்து ரஷிய அதிகாரிகள் கூறுகையில், ரஷியாவின் 6 பிராந்தியங்களில் ட்ரோன்கள் மூலம் மிகத் தீவிரமான தாக்குதலை உக்ரைன் நடத்தியது. க்ஸோவ் பிராந்தியத்திலுள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதலில் அங்கு மிகப் பெரிய அளவில் தீ பரவியது.

ஓரியோல், ப்ரியான்ஸ்க், ரைஸான், கலுகா ஆகிய பிராந்தியங்களிலும், தலைநகா் மாஸ்கோவை சுற்றியுள்ள பகுதிகளிலும் உக்ரைனின் ஆளில்லா விமானங்களை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறியிருந்தனர்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி விருப்பம் தெரிவித்ததையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே அமைந்துள்ள 4 பிராந்தியங்களின் கணிசமான பகுதிகள் தற்போது ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ளன.

அந்தப் பகுதிகளை மீட்பதற்காக மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் எதிா்த் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன், அவ்வப்போது ரஷிய எல்லைக்குள்ளும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதுபோல, தற்போதும் உக்ரைன் மிகக் கடுமையான டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com