இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அணிந்திருந்த காலணிகளுக்காக விமர்சதனத்தை எதிர்கொண்டு வருகிறார்.
கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக் அவரது அரசின் புதிய வரி மற்றும் குழந்தைநலக் கொள்கைகள் சார்ந்து பேசிய நேர்காணலின்போது எல்லோரும் பயன்படுத்தும் காலணியான அடிடாஸ் சம்பாவை அணிந்திருந்தார்.
மக்களுடன் இணக்கமாக இருப்பது போல் காட்டுவதற்கு பிரதமர் இவ்வாறு செய்வதாக சமூக வலைத்தள பயனர்களால் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
ஜெர்மன் அடிடாஸ் நிறுவனத்தின் சம்பா காலணிகள் 100 டாலர் மதிப்புடையவை. ரிஷி சுனக், அதிக வளமுடைய பிரிட்டன் பிரதமர்களில் ஒருவர்.
ஒரு பயனர், “பிரதமராக பதவிவகிப்பவர் இவ்வாறு செய்வதை மன்னிக்க முடியாது. இளமையாகவும் ட்ரெண்டியாகவும் காட்டிக்கொள்ள அவர் மெனக்கெடுகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
இன்னொருவர், “அடிடாஸ் இந்த ஷு தயாரிப்பதை நிறுத்திவிடலாம். ரிஷி சுனக் இதன் மதிப்பையே கெடுத்துவிட்டார்” என பதிவிட்டுள்ளார்.
தன்னை விமர்சிக்கும் சம்பா காலணி ரசிகர்களிடம் ரிஷி சுனக் முழுமையான மன்னிப்பைக் கோருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் நீண்டகால அடிடாஸ் காலணிகளின் பிரியர் என்றும் எப்போதும்போல தான் அணிவதில் கவனத்தையும் ஆர்வத்தையும் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக் குறைவு மற்றும் செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவற்றுக்காக கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு குறைந்து வருகிறது. இந்த நிலையில் ரிஷி சுனக் தனது ஃபேஷன் முனைப்பால் இவ்வாறு விமர்சிக்கப்படுவது வருகிற தேர்தலில் கட்சியின் நம்பிக்கையை சோதிப்பதாக உள்ளதாக கட்சி ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.