ரஷியாவிடம் வீழ்ந்தது மேலும் ஓர் உக்ரைன் நகரம்

கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள அவ்டீவ்கா நகரை ரஷியப் படையினர் சனிக்கிழமை கைப்பற்றினர்.
ரஷியாவிடம் வீழ்ந்தது மேலும் ஓர் உக்ரைன் நகரம்
SWAMINATHAN

கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள அவ்டீவ்கா நகரை ரஷியப் படையினர் சனிக்கிழமை கைப்பற்றினர்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து சில நாள்களில் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அந்த நாட்டுக்குக் கிடைத்துள்ள வெற்றி, ரஷிய படையினருக்கு உற்சாகத்தை அளிக்கும் என்று கருதப்படுகிறது.

இது குறித்து முகநூலில் உக்ரைன் தளபதி ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ரஷிய படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து அவ்டீவ்கா நகரைப் பாதுகாத்து வந்த உக்ரைன் படையினர், அந்த நகரிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

ரஷிய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு, அதன் விளைவாக உக்ரைன் வீரர்களின் உயிருக்கும், உடல்நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைக்கேற்ற சாதகமான நிலைகளில் உக்ரைன் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அவ்டீவ்கா நகரில் நமது படையினர் கெளரவத்துடன் சண்டையிட்டு தங்களால் முடிந்த அளவுக்கு ரஷிய படையினருக்கு இழப்பை ஏற்படுத்தினர் என்று அந்தப் பதிவில் ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, ரஷிய படையினரால் முற்றுகையிடப்பட்டிருந்த பாக்முத் நகரைப் பாதுகாப்பதற்காக அங்கு தொடர்ந்து 9 மாதங்களாக வீரர்களை நிறுத்தி ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கி சண்டையிடச் செய்தார்.

உக்ரைன் போரில் மிக நீண்டதும், மிக அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்புகளையும் அந்தச் சண்டை ஏற்படுத்தியது. எனினும், இறுதியில் பாக்முத் நகரை ரஷியாவிடம் உக்ரைன் இழந்தது. இந்த விவகாரத்தால் ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கியின் போர் உத்தி விமர்சனத்துக்குள்ளானது.

இந்தச் சூழலில், கடந்த 4 மாதங்களாக அவ்டீவ்கா நகரைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினர் அந்த நகரைச் சுற்றிவளைத்துள்ளனர். நகரைப் பாதுகாப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள உக்ரைன் வீரர்களைவிட அதிக எண்ணிக்கையில் அங்கு ரஷிய படையினர் குவிக்கப்பட்டனர்.

மேலும், நகரைப் பாதுகாப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் படையினருக்கு உணவு, ஆயுதங்கள் வருவதற்கான வழித்தடங்களையும் ரஷிய ராணுவம் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவ்டீவ்கா நகரம் வீழ்வது உறுதியான நிலையில் அங்கிருந்து வீரர்களை உக்ரைன் ராணுவம் திரும்ப அழைத்துள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப். 24-ஆம் தேதி படையெடுத்து, டொனட்ஸ்க் உள்ளிட்ட கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

இருந்தாலும், கடந்த சில மாதங்களாக போரில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அவ்டீவ்கா நகரம் ரஷியாவிடம் வீழ்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com