கொழும்பு : இலங்கையின் டிகோவிடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, கடந்த 16-ஆம் தேதி கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். எனினும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை அரசுடன் பேச கடற்கொள்ளையர்கள் அனுமதித்திருப்பதாகவும், மீனவர்களுடன் இலங்கை அரசு தொடர்பிலிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த மீனவர்களை மீட்க இந்தியாவின் உதவியை நாடியிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்களை மீட்க இந்தியா உதவ முன்வந்துள்ளதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கயான் விக்கிரமசூர்யா தெரிவித்தார்.