கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரின் புகைப்படங்களை கனடா காவல்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுர்ரேவில் உள்ள குருத்வாரா வளாகத்தில், நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர் கனடிய நாட்டு குடியுரிமை பெற்றவர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் கமல்ப்ரீத் சிங், கரன்ப்ரீத் சிங், கோல்டி பிரார் ஆகியோர், நிஜ்ஜாரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் கனடா காவல்துறை அவர்களது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
நிஜ்ஜார் கொலையில் இவர்கள் மூவருக்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, காவல்துறையின் கூட்டு முயற்சியோடு இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வாழ்ந்து வரும் இந்த மூன்று குற்றவாளிகளும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதும், பாகிஸ்தாலனின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் இருந்துகொண்டு பல்வேறு கும்பல்கள் இந்தியாவில் பல குற்றங்களை செய்துகொண்டிருக்கின்றன. இவர்களை குற்றவாளிகள் என்று தேசிய புலனாய்வு அமைப்பும் அறிவித்துள்ளது. அவர்கள் பலரும் கனடாவில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பிடமிருந்து தொடர்ந்து பணம் வருகிறது. இவர்களுக்கு எதிராக இந்தியா தரப்பில் ஆதாரங்கள் அளிக்கப்பட்டாலும் கனடா அரசும் காவல்துறையும் ஒத்துழைப்பதில்லை என்றும், தற்போது கனடிய காவல்துறை, இந்த வழக்கைக் கொண்டு வந்து, இந்திய அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க முயற்சிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவு அதிகாரிகளுக்கு பங்குள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்ததைத் தொடர்ந்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.