காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை ‘இனப்படுகொலை’ என விமர்சிக்கும் கொலம்பியா, பாலஸ்தீன பிராந்தியத்துக்கான கொலம்பிய தூதரகத்தை ரமல்லாவில் திறக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
மேற்குக் கரை நகரான ரமல்லாவில் கொலம்பியாவின் தூதரகத்தை நிறுவ கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ அறிவுறுத்தியுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் லூயிஸ் முரில்லோ தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்ததையடுத்து கொலம்பியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
7வது மாதமாக தொடர்ந்துவரும் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 35,709 ஆக அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ஹமாஸ் தலைவர்களை கைது செய்ய சர்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அக்.7 ஹமாஸ் இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 1,170 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 252 பேர் பிணைக்கைதிகளாக ஹமாஸால் பிடித்து செல்லப்பட்டனர். அவர்களில் 124 பேர் இன்னமும் பிணையில் உள்ளதாக கருதப்படும் நிலையில் 37 பேர் இறந்திருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து வருகிறது.