
வங்கதேசத்தின் அதிபர் முகமது ஷஹாபுதின் பதவி விலகக் கோரி, அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டனர்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் டாக்காவில் நடைபெற்ற பேரணியில் அதிபர் பதவி விலகல் உள்பட 5 கோரிக்கைகளை ஷேக் ஹசீனாவின் ராஜிநாமாவுக்காக போராடிய மாணவர் இயக்கத்தினர் முன்வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு அதிபர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்திய மாணவர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்திய நிலையில், அதிபரை ராஜிநாமா செய்யக் கோரி அவர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், தடுப்பை மீறி போராட்டக்காரர்கள் முன்னேற முயற்சித்ததால், பாதுகாப்பு படையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஹசீனாவின் சர்வாதிகார அரசின் கூட்டாளியான தற்போதைய அதிபர் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்ட வல்லுநரான தற்போதைய வங்கதேச அதிபர் முகமது சஹாபுதீன், அவாமி லீக் ஆட்சியின்போது, நாட்டின் 16-வது அதிபராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹசீனா ராஜிநாமா
வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. மாணவா்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
வங்கதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தார். இதையடுத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதாக அறிவித்தது.
தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால பிரதமராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.