
தனது வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு என, விவகாரத்து பற்றி பில் கேட்ஸ் சொல்லியிருந்த நிலையில், வாழ்வில் அது மிக அவசியமாக இருந்தது என பதிலளித்திருக்கிறார் மெலிண்டா கேட்ஸ்.
2021ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் - மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தம்பதி விவாகரத்து பெற்றிருந்த நிலையில், பிரிவது மிகவும் அவசியமாக இருந்தது என்று கூறியிருக்கிறார் மெலிண்டா.
கடந்த ஜனவரியில், பில் கேட்ஸ் அளித்த நேர்காணல் ஒன்றில், 27 ஆண்டு கால திருமண வாழ்வை விவகாரத்து மூலம் முடித்துக் கொண்டது தனது வாழ்வில் தான் செய்த மிகப்பெரிய தவறாக நினைத்து வருந்துவதாகத் தெரிவித்திருந்தார்.
இருவருக்கும் 1994ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
அண்மையில் ஒரு ஆங்கில ஊடகம் நடத்திய கேன்டிட் நேர்காணலில், மிகவும் நெருங்கிய உறவில், உங்களது மதிப்புடன் உங்களால் வாழ முடியாத நிலை ஏற்படும்போது, பிரிவது என்பது மிகவும் அவசியமாகிறது என்று, பில் கேட்ஸ் சொன்னதற்கு பதிலளிக்காமல், மறைமுகமாக பதில் அளித்திருந்தார்.
அவர் என்ன சொல்லியிருந்தார் என்பதுகூட எனக்குத் தெரியாது, எனவே, அவர் என்ன சொல்லியிருந்தார் என்பது குறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. அது அவரது சொந்த வாழ்க்கை. எனக்கென்று ஒரு வாழ்க்கை உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று மிகவும் உறுதியாக பதிலளித்திருந்தார்.
ஆனால், விவாகரத்தின்போது அவர் உணர்ந்த அனுபவத்தைப் பற்றி அவர் பகிர்ந்துகொள்ளும்போது சற்று உணர்ச்சிவயப்பட்டே பேசினார். நாங்கள் பிரியும்போது, மிக மோசமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தேன். ஒரு திருமண உறவிலிருந்து விலகும்போது, அது மிக மிகக் கடினம். வெளியிலிருந்து வரும் விமர்சனங்களை புறந்தள்ளுவது என்பது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார்.
விவாகரத்து முடிவு
அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பவருமான பில் கேட்ஸ், விவாகரத்து குறித்து அறிவித்தபோது உலகமே அதிர்ந்துபோனது.
விவகாரத்து குறித்து பில் கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவது பரந்து விரிந்து செயல்படும் அறக்கட்டளையை நிறுவி அதனை உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், நலமாகவும் வாழ வழிவகை செய்து வருகிறது.
அதுபோல, பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இருவரும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். ஆனால், எங்களது திருமண வாழ்வை முடித்துக்கொள்ள ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம் என்று தெரிவித்திருந்தனர்.