
மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு சுமார் 2.5 லட்சம் பேர் இறுதி மரியாதை செலுத்தியுள்ளதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ், கடந்த ஏப்.21-ம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார்.
அதைத் தொடர்ந்து, வாடிகனிலுள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிந்துள்ள நிலையில் கடந்த 3 நாள்களில் மட்டும் 2.5 லட்சம் பேர் போப் பிரான்சிஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதாக வாடிகன் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பார்வை நேரம் முடிவதற்கு முன்னரே புனித பீட்டர் சதுக்கம் மூடப்பட்டதினால், அஞ்சலி செலுத்த வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், போப் பிரான்சிஸின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி நேற்று (ஏப்.25) மாலை மூடப்பட்டு, அடுத்தக்கட்ட சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதி சடங்குகள் நிறைவேற்றப்பட்டு இன்று (ஏப்.26) மதியம் அவரது உடல் புனித மேரி தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதால், ஏராளமான நாடுகளின் தலைவர்களும், அரசக் குடும்பத்தினரும் வாடிகன் விரைந்துள்ளனர்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, போப் பிரான்சிஸின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், இன்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவ தளபதி படுகொலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.