
ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள தலைவர்களைச் சந்திப்பதற்காக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கனடா தலைமையில் ஆல்பர்ட்டா மாகாணம் கனானாஸ்கிஸ் பகுதியில் 2 நாள்கள் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாடு நேற்று(ஜூன் 17) நிறைவடைந்தது.
கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளையில், கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் ஜி7 கூட்டமைப்பைச் சேராத இந்திய பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றனர்.
கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் நட்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் அருமையான சந்திப்பு இருந்தது. ஜி7 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ள கனட அரசுக்கு வாழ்த்துகள். இந்தியாவும் கனடாவும் ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் அடிப்படையில் வலிமையாக இணைந்துள்ளன.
பிரதமர் கார்னியும் நானும் இணைந்து இந்தியா - கனடாவுக்கு இடையேயான நட்புறவுக்கு வலிமை சேர்க்க நெருக்கத்துடன் பணியாற்றுவோம். வர்த்தகம், எரிசக்தி, விண்வெளி, சுத்தமான எரிசக்தி, முக்கியமான கனிமங்கள், உரங்கள் போன்றவற்றில் இணைந்து பணியாற்றவிருக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தற்போது குரோஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.