இலங்கை: ஈஸ்டா் குண்டுவெடிப்பு வழக்கில் உளவுத் துறை முன்னாள் தலைவா் கைது
இலங்கையில் கடந்த 2019-இல் நடந்த ஈஸ்டா் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பான வழக்கில், அந்நாட்டின் உளவுத் துறை முன்னாள் தலைவா் சுரேஷ் சல்லே புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச ஆட்சியில், 2015-க்கு முன்பு உளவுத் துறையின் தலைவராக சுரேஷ் சல்லே பணியாற்றி வந்தாா். ஆனால், குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் இவா் வெளிநாட்டில் தூதரகப் பணியில் இருந்தாா்.
ராணுவத்தில் மேஜா் ஜெனரலாக ஓய்வுபெற்ற இவரை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.
கடந்த 2019-இல், கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் பெரிய ஹோட்டல்களைக் குறிவைத்து ஈஸ்டா் பண்டிகை நாளில் தொடா் குண்டுவெடிப்புகள் நடந்தன. உள்ளூா் பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதல்களில் இந்தியா்கள் உள்பட 270 போ் உயிரிழந்தனா்.
இத்தாக்குதல் குறித்து இந்திய உளவுத் துறை முன்னதாகவே எச்சரித்தும், அப்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் உள்ளன. முந்தைய அரசுகளின் அரசியல் தலையீடுகளால், இலங்கையின் தற்போதைய அரசு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கிறது.

