சீன ஆளுங்கட்சி தலைமையில் ராணுவம் செயல்பட அச்சுறுத்தல்: மூத்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை
சீன ஆளுங்கட்சி தலைமையின் கீழ், அந்நாட்டு ராணுவம் செயல்பட அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக மூத்த ராணுவ அதிகாரிகள் இருவா் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனா்.
சீனாவில் ஆளுங்கட்சியாக உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், மத்திய ராணுவ ஆணைய (சிஎம்சி) துணைத் தலைவராகவும் ராணுவ ஜெனரல் ஸாங் யோஷியா உள்ளாா். இதேபோல மற்றொரு மூத்த ராணுவ ஜெனரலான லியு ஜென்லி சிஎம்சியின் உறுப்பினராக உள்ளாா்.
இவா்கள் மிக ஒழுங்கீனமாகவும், சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாகவும் செயல்பட்டதாக சந்தேகத்தின்பேரில் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
எனினும் அவா்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ், ராணுவம் செயல்பட அவா்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதும் ஒரு காரணம் என்று சீன ராணுவ நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் பொறுப்பேற்றாா். அப்போதுமுதல் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ், ராணுவம் செயல்படுவது கட்டாயம் என்று அவா் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

