பெங்களூர், ஜன. 8: சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுத்து நிறுத்த சுரங்கங்களை தேசியமயமாக்குவதே சிறந்த தீர்வாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினரும், எம்.பி.யுமான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை இந்திய ஜனநாயக கட்டமைப்பில் ஊழலை எதிர்கொள்ளும் சவால்கள் என்ற கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கை தொடக்கிவைத்து பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், சட்டவிரோத சுரங்கத்தொழில் பெருகியுள்ளது கவலையளிக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், நாட்டில் இருக்கும் எல்லா சுரங்கங்களையும் தேசியமயமாக்க வேண்டும். உலகில் கனிமவளங்கள் முழுமையாக தீர்ந்துபோகும்போது பயன்படுத்தி கொள்வதற்காக, அமெரிக்கா மற்றும் சீனா தங்கள் நாட்டு கனிமவளங்களை இன்னும் பயன்படுத்தவில்லை. ஆனால், இந்தியாவில் மட்டும் கனிமவளங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதற்கு மூக்கணாங்கயிறு போட தவறினால், எதிர்கால இந்தியா ஆபத்தான காலகட்டத்தை எதிர்கொள்ள நேரிடும்.
சுரங்கங்களால் இயற்கை வனங்கள் நாசமடைந்து வருகின்றன.
இதுதவிர, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதற்கு சுரங்கங்களை தேசியமயமாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை மதிப்பிடுவதற்காகதான் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அரசியல் வேறுபாடுகளை மறந்து, அனைத்து கட்சிகளும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.