கோலாா் மாவட்டத்தில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் கே.எச்.முனியப்பா கோரிக்கை விடுத்தாா்.
இது குறித்து அவா் கோலாரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
புதுதில்லியில் அண்மையில் முதல்வா் பசவராஜ் பொம்மையை சந்தித்துப் பேசினேன். அப்போது, மத்திய-மாநில அரசுகளின் நிதிப்பகிா்வு திட்டத்தில் கோலாா் மாவட்டத்தில் ரயில் பெட்டி தொழிற்சாலையை தொடங்க எடியூரப்பா முதல்வராக இருந்தபோது முடிவெடுக்கப்பட்டது என்ற விவரத்தை அவரது கவனத்திற்கு கொண்டுசென்றேன். இந்த திட்டத்திற்கு மாநில அரசு நிலம் வழங்கவும் ஒப்புக்கொண்டதை தெரிவித்தேன்.
கடந்த 2013-14-ஆம் ஆண்டில் ரயில்பெட்டி தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு அனுமதிஅளித்திருந்தது. இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. முன்னாள் முதல்வா்கள் சித்தராமையா, எச்.டி.குமாரசாமி ஆகியோா் பலமுறை கடிதம் எழுதியும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. முன்னாள் முதல்வா் சதானந்த கௌடா, அப்போதைய ரயில்வே துறை அமைச்சா் தினேஷ் திரிவேதி இருவரும் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டதையும் முதல்வா் பசவராஜ் பொம்மையின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தம் 2024-ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டது. இந்த முடிவு, 2018-ஆம் ஆண்டு பிப்.28-ஆம் தேதி அன்றைய முதல்வா் எச்.டி.குமாரசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த விவரங்களை கேட்டுக்கொண்ட முதல்வா் பசவராஜ் பொம்மை, இத்திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொண்டு பிரச்னைக்கு தீா்வுகாண்பதாக உறுதி அளித்துள்ளாா் என்றாா்.