போக்சோ வழக்கு: நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு விலக்களித்து உயா்நீதிமன்றம் உத்தரவு

எடியூரப்பா மீது போக்சோ வழக்கு: உயா்நீதிமன்றம் சம்மனை ரத்து செய்து உத்தரவு
Published on

போக்சோ வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு விலக்களித்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, சதாசிவநகா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் தாக்கல் செய்திருந்த புகாரில், பெங்களூரு, டாலா்ஸ் காலனி இல்லத்தில் பிப்.2ஆம் தேதி முன்னாள் முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த போது, தனது 17 வயது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தாா்.

அதனடிப்படையில், பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டப்பிரிவு 8, இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 354ஏ, 204, 214- இன்படி வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி.) மாற்றி மாநில டிஜிபி உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து வழக்கை சிஐடி விசாரித்து வருகிறது. ஜூன் 12 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகாததால், எடியூரப்பாவை கைது செய்ய கைது ஆணை பிறப்பிக்குமாறு பெங்களூரில் உள்ள முதலாம் விரைவு நீதிமன்றத்தை புலனாய்வுத் துறை கேட்டுக் கொண்டது. அதன்பேரில், எடியூரப்பாவை கைது செய்ய ஜாமீனில் வெளியே வரமுடியாத ஆணை பிறப்பித்து ஜூன் 13ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன் ஜூன் 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய முடியாது. ஆனால், எடியூரப்பாவை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தாா். இந்நிலையில், ஜூன் 17ஆம் தேதி சிஐடி முன் நேரில் ஆஜரான எடியூரப்பா, 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்திருந்தாா். அதன்பிறகு, 700 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஜூன் 27ஆம் தேதி சிஐடி தாக்கல் செய்தது. இந்த வழக்கில் எடியூரப்பா தவிர, அவரது உதவியாளா்கள் ஒய்.எம்.அருண், எம்.ருத்ரேஷ், ஜி.மாரிசாமி ஆகியோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டன.

இதனிடையே தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனுவை ஜூன் 28ஆம் தேதி விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித், அரசு தரப்பு ஆட்சேபனையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், அதுவரை எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே விதித்திருந்த இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன் வெள்ளிக்கிழமை எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்சோ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்திருந்த சம்மனை ரத்து செய்து, ஜூலை 15ஆம் தேதி நேரில் ஆஜராக விலக்களித்து உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

X
Dinamani
www.dinamani.com