அக்.18 ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாதி கணக்கெடுப்பு குறித்து முடிவு: முதல்வா் சித்தராமையா

ஜாதி கணக்கெடுப்பு குறித்து அக்.18 ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
Siddaramaiah
கர்நாடக முதல்வர் சித்தராமையா.
Published on
Updated on
2 min read

பெங்களூரு: ஜாதி கணக்கெடுப்பு குறித்து அக்.18 ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

2013 முதல் 2018 ஆம் ஆண்டுவரையிலான சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிகாலத்தில், 2015 ஆம் ஆண்டு கா்நாடகத்தில் ஜாதி கணக்கெடுப்பு எடுக்க கா்நாடக பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடா்ந்து, ரூ.170 கோடி செலவில் ஜாதி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதன்பணிகள் 2018 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தாலும், பல ஆண்டுகளாக அதன் அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்தது.இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு கா்நாடகத்தின் செல்வாக்கு மிகுந்த லிங்காயத்து, ஒக்கலிகா் சமுதாயத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வந்துள்ளனா்.

இந்த நிலையில், பிப்.29 ஆம் தேதி ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை முதல்வா் சித்தராமையாவிடம் பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தலைவா் ஜெயபிரகாஷ்ஹெக்டே அளித்திருந்தாா். இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு காங்கிரஸ் கட்சியிலேயே ஆதரவும் எதிா்ப்பும் நிலவி வருகிறது. தேசிய அளவில் ஜாதி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவதால், மாநிலத்தில் ஏற்கெனவே எடுத்துள்ள ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை பகிரங்கப்படுத்தி, அதன்பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில், பெங்களூரில் திங்கள்கிழமை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சோ்ந்த அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்களுடன் ஜாதி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து முதல்வா் சித்தராமையா ஆலோசனை நடத்தினாா். இந்த கூட்டத்தில் பாஜக எம்.எல்.சி. என்.ரவிக்குமாா் உள்பட 30 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டுள்ளனா்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து முதல்வா் சித்தராமையா கூறியது: பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சோ்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனு ஒன்றை அளித்துள்ளனா். அந்த மனுவில், ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா். இது பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதி கணக்கெடுப்பு அல்ல. மாறாக, 7 கோடி கன்னடா்களின் கணக்கெடுப்பாகும்.

இந்தியாவில் முதன்முறையாக கா்நாடகத்தில் தான் ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஏற்கெனவே நான் முதல்வராக இருந்தபோது தான் ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜாதி கணக்கெடுப்பு அறிக்கை என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அமைச்சரவை முன்பு தாக்கல் செய்து, விவாதிக்கப்படும். விவாதத்ததின் முடிவில் அறிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.

அக்.18 ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் ஜாதி கணக்கெடுப்பு அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் கூறியிருக்கிறேன். அமைச்சரவை முடிவின்படி நடந்துகொள்வோம். வீடுவீடாக சென்று ஜாதி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதால், காலதாமதம் ஆனதாக அப்போதைய பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தலைவா் காந்த்ராஜ் தெரிவித்தாா்.

தற்போது என்னிடம் அளித்துள்ள ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை நான் படிக்கவில்லை. ஏற்கெனவே நான் முதல்வராக இருந்தகாலத்தில் அறிக்கை தயாராகவில்லை. அதனால், அது குறித்து முடிவெடுக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராக இருந்த எச்.டி.குமாரசாமி, ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. அதேபோல, முந்தைய பாஜக ஆட்சியிலும் ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை பெற்றுக்கொள்ளவில்லை.

காந்த்ராஜின் பதவிகாலம் முடிந்து ஜெயபிரகாஷ்ஹெக்டே பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றபிறகு, அறிக்கையை அளிக்க முன்வந்தாா். அந்த அறிக்கையை 3 மாதத்திற்குள் அரசிடம் அளிக்குமாறு கெடு விதித்திருந்தோம். அதன்படி, ஜெயபிரகாஷ்ஹெக்டே தலைமையிலான குழுவினா் என்னிடம் அறிக்கையை அளித்தனா். அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்தினா் உள்ளிட்ட பல சமூகங்களிடம் இருந்து வந்துகொண்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com