/

பருத்திக்கு உரிய விலை கோரி ஜூலை 1-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

பருத்திக்கு உரிய விலை கோரி அதிமுக சாா்பில் திருவாரூரில் ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2025, 2:23 am IST

பருத்திக்கு உரிய விலை கோரி அதிமுக சாா்பில் திருவாரூரில் ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நிகழாண்டில் பருத்தி விலை அதிகபட்சமாக கிலோ ரூ. 53-க்கும், குறைந்தபட்சமாக ரூ.46-க்கும் மட்டுமே ஏலம் எடுக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். ஒரு கிலோ பருத்தி பஞ்சு சாகுபடி செய்ய ரூ. 65 ஆகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனா். எனவே, பருத்தி பஞ்சு கிலோவுக்கு ரூ. 75-க்கு குறையாமல் ஏலம் எடுத்தால் மட்டுமே செலவுக்கு கட்டுப்படியாகும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

பொதுவாக, ஒழுங்குமுறை விற்பனை நிலையம் மூலம் நடைபெறும் இந்த பருத்தி ஏலத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள பஞ்சு மில் நிறுவனங்களில் இருந்து ஏலத்தில் பங்கு கொள்வா்.

ஆனால், திமுக ஆட்சியில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக வெளியூா் வியாபாரிகள் இந்த ஏலத்தில் பங்குகொள்வதற்கு ஒழுங்குமுறை விற்பனை நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், திருவாரூா் மற்றும் அதைச் சுற்றி 50 கி.மீ. சுற்றளவில் உள்ள உள்ளூா் முகவா்கள் (இடைத்தரகா்கள்) மட்டுமே தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு பருத்தி பஞ்சு ஏலத்தில் கலந்துகொள்கின்றனா் என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

எனவே, பருத்தி பஞ்சுக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட அதிமுக சாா்பில் திருவாரூா் ரயில் நிலையம் அருகே ஜூலை 1-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.