கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விபத்து: விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் சாவு

சென்னை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில், விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் இறந்தனர்.
Updated on
1 min read

சென்னை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில், விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் இறந்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் மோகனரங்கம். இவர், சென்னை அருகே உள்ள போரூர் கொளப்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே பழையப் பொருள்களில் இருந்து ஆஸ்பெஸ்டாஸ் சீட் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருள்களை தயாரிக்கும் ஆலை வைத்து நடத்தி வருகிறார்.
இங்கு ஒடிஸா, பிகார், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்கின்றனர். அந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சேகரித்து வைப்பதற்காக 8 அடி ஆழமுள்ள 4 பெரிய தொட்டிகள் உள்ளன.
இவற்றில் ஒரு தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக, அங்கு பணிபுரியும் ஓடிஸா மாநிலத்தைச் சேர்ந்த சந்திர துவாஜ திசாய் (22), சுதர்சன் பிரதான் (24) ஆகிய இருவரும், தொட்டிக்குள் வெள்ளிக்கிழமை இறங்கினர். அப்போது அந்தத் தொட்டியில் இருந்த விஷவாயுவை நுகர்ந்ததினால், இருவரும் மயங்கினர். இதைப் பார்த்த பிற தொழிலாளர்கள், அவர்கள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் இருவரும் மயங்கியதால், அந்த தொட்டிக்குள்ளேயே விழுந்தனர். இதையடுத்து தொழிலாளர்கள், தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள், பூந்தமல்லி,விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தொட்டியில் இருந்து இருவரும் சடலமாகவே மீட்கப்பட்டனர். இதையடுத்து அங்கு வந்த மாங்காடு போலீஸார், இருவர் சடலத்தையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com