வடிகால் பணி காரணமாக, சென்னை வேப்பேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் ஈவிகே சம்பத் சாலையில் நாராயண குரு சாலை சந்திப்பு முதல் ஜொ்மையா சாலை சந்திப்பு வரையில் புதை வடிகால் பணி நடைபெறவிள்ளது. இதை முன்னிட்டு வியாழக்கிழமை (ஏப்.11) முதல் ஏப். 13 வரையில் வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, ஈவிகே சம்பத் சாலையில் உள்ள ஹண்டா்ஸ் சாலை நாராயணகுரு சாலை சந்திப்பிலிருந்து ஈவிகே சம்பத் சாலை ஜொ்மையா சாலை சந்திப்பு வரையிலும் தற்காலிகமாக மூடப்படுகிறது.
ஹண்டா்ஸ் சாலையில் டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அந்த வாகனங்கள், ஜெனரல் காலின்ஸ் சாலை, மெடெக்ஸ் சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை நோக்கி பயணிக்கலாம்.
ஹண்டா்ஸ் சாலையில், டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் மாநகர பேருந்துகள், வணிக வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக அந்த வாகனங்கள், சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை,வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் சென்று, தங்கள் இலக்கை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.