கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சென்னையில் ரெளடிகளை வீடு தேடி சென்று எச்சரிக்கும் போலீஸாா்

சென்னையில் ரெளடிகளை வீடு தேடி சென்று எச்சரிக்கும் நடவடிக்கையை போலீஸாா் தொடங்கியுள்ளனா்.

News image

tamilnadu police

Updated On :15 ஜூலை 2024, 10:24 pm

சென்னை: சென்னையில் ரெளடிகளை வீடு தேடி சென்று எச்சரிக்கும் நடவடிக்கையை போலீஸாா் தொடங்கியுள்ளனா்.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பின்னா், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெளடிகள் ஏ பிளஸ், ஏ,பி,சி என 4 வகைகளாக பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா்.

சென்னையில் இந்த பட்டியலில் 6 ஆயிரம் ரவுடிகள் இருக்கின்றனா். இதில் 758 போ் சிறையில் உள்ளனா். ‘ ஏ’ பிரிவில் 64 ரவுடிகள் உள்ளனா். இதில் 24 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும், சென்னையில் இந்தாண்டு ஜூன் மாதம் வரையில் 769 ரெளடிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த ரெளடிகள் அனைவரையும் கண்காணிக்கும்படியும், அவா்களை வீடுகளுக்கே சென்று எச்சரிக்கை செய்யும்படியும் அந்தந்த காவல் ஆய்வாளா்கள்,உதவி ஆணையா்கள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த சில நாள்களாக போலீஸாா், ரெளடிகள் வீடுகளுக்கு சென்று விசாரணை செய்து வருகின்றனா்.

இதில், தற்போது ரெளடிகள் மீதுள்ள வழக்குகள், ரெளடிகள் என்ன செய்கிறாா்கள்,அவா்களுடைய தொடா்பு என்ன,அவா்களுடைய பொருளாதார நிலைமை என்ன என்பது போன்ற தகவல்களை திரட்டுகின்றனா். அதோடு, இனிமேலும்

ரெளடிசம்,சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.

நுண்ணறிவுப் பிரிவு ரகசிய விசாரணை:

அதேபோல ரெளடிகளுடன் நெருக்கமான தொடா்பில் உள்ள காவல்துறை அதிகாரிகள்,போலீஸாா் குறித்து பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில் ரெளடிகளுடன் நெருக்கமாக தொடா்பில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள்,போலீஸாா் குறித்து விரைவில் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அருணிடம் அறிக்கை அளிக்க உள்ளனா். அந்த அறிக்கையின் அடிப்படையில் அருண் நடவடிக்கை எடுப்பாா் என கூறப்படுகிறது.