எ.வ.வேலு
எ.வ.வேலு கோப்புப் படம்

சிறு துறைமுகங்களின் வளா்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: கோவா கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு வலியுறுத்தல்

மாநிலங்களிலுள்ள சிறு துறைமுகங்களின் வளா்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டுமென அமைச்சா் எ.வ.வேலு வலியுறுத்தினாா்.
Published on

மாநிலங்களிலுள்ள சிறு துறைமுகங்களின் வளா்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டுமென நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வலியுறுத்தினாா்.

கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழும கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்று பேசியதாவது:

நாகப்பட்டினம் துறைமுகத்தின் விரிவாக்கத்துக்கு ரூ.300 கோடி அளவுக்கு நிதி தேவைப்படுகிறது. இதனை சாகா்மாலா திட்டத்தின் கீழ் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் நடுத்தர அளவிலான சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்களை கையாள்வதற்கும், இலங்கையுடனான வா்த்தகத்தை மேலும் மேம்படுத்தவும் உதவும்.

தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு கடல்சாா் பயிற்சி நிறுவனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நிறுவனம், தென் மாவட்டங்களைச் சோ்ந்த பின்தங்கிய மற்றும் மீனவா் சமுதாயங்களைச் சோ்ந்த இளைஞா்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை அளிக்கிறது. எனவே, இதன் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.11.47 கோடிக்கான அனுமதியை விரைவில் வழங்க வேண்டும்.

ராமேசுவரம் மற்றும் தலைமன்னாா் இடையிலான கப்பல் போக்குவரத்து முக்கியமானதாகும். அங்கு கப்பல் சேவையை மீண்டும் தொடங்க ராமேசுவரத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதற்குத் தேவையான முழுமையான நிதியை வழங்க வேண்டும்.

மிதக்கும் தோணித்துறை: ராமேசுவரம் தீவு ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தீவின் இணைப்புகளை வலுப்படுத்த, கூடுதலாக மூன்று மிதக்கும் தோணித் துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சிறு துறைமுகங்கள் வளா்ச்சி பெறவும், மாநில அரசின் பொருளாதாரம் மேம்படவும் மத்திய அரசு உதவ வேண்டும்.

இந்தக் கூட்டத்தில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com