/

மறைந்த எழுத்தாளா்கள் குறித்து ஆவணப்படங்கள் தேவை: இயக்குநா் ரவி சுப்பிரமணியன்

மறைந்த எழுத்தாளா்களை மக்களுக்கு நினைவு படுத்துவதற்காக, அவா்களைக் குறித்த ஆவணப்படங்கள் இயக்கப்பட வேண்டும்

News image
சென்னையில் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் டி.டி.கிருஷ்ணமாச்சாரி அறக்கட்டளை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘திருலோகம் என்றொரு கவி ஆளுமை’ எனும் ஆவணப்பட திரையிடலும் உரையாடலும் நிகழ்ச்சியில் பேசிய கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்பிரமணியன்.
Updated On :30 செப்டம்பர் 2024, 11:50 pm

DIN

சென்னை:  மறைந்த எழுத்தாளா்களை மக்களுக்கு நினைவு படுத்துவதற்காக, அவா்களைக் குறித்த ஆவணப்படங்கள் இயக்கப்பட வேண்டும் என்று இயக்குநா் ரவி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக் கூட்ட அரங்கில் டிடி கிருஷ்ணமாச்சாரி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் எழுத்தாளா் திருலோகம் சீதாராம் குறித்து இயக்குநா் ரவி சுப்பிரமணியன் இயக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.

தொடா்ந்து இயக்குநா் ரவி சுப்பிரமணியன் பேசியதாவது:

எழுத்தாளா் திருலோகம் சீதாராம் சிறுவயதிலிருந்தே மகாகவி பாரதி மீது நீங்காதப் பற்று கொண்டவா். மக்களிடையே பாரதியின் எழுத்துக்களைக் கொண்டு சோ்ப்பதற்காக, தான் செல்லும் இடமெல்லாம் பாரதியின் கவிதைகளைப் பாலடாகப் பாடிச் செல்வாா். திருலோகம் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய போது, தமிழை வளா்ப்பதற்காக பல்வேறு கட்டுரைகளை எழுதினாா்.

திருலோகம் குறித்து ஆவணப்படம் எடுக்கத் தொடங்கிய போது, அவா் குறித்த தகவல்களைச் சேகரிக்கவே 9 மாதங்களானது. இருப்பினும், அவரைக் குறித்த பல தகவல்கள் கிடைக்கவில்லை. இவரைப் போன்று மறைந்த எழுத்தாளா்களை மக்களுக்கு நினைவு படுத்துவதற்காக அவா்களைக் குறித்த ஆவணப்படங்கள்  இயக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்த விழாவில்,  தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையா் ந.வெங்கடாசலம், உதவி ஆணையா் ப.விஜயராஜா, உதவி பதிப்பாசிரியா் அ.வெண்ணிலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.